பிடாடாரி பேட்டையில் உள்ள விடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்குகளின் முகப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள இலைகளின் வடிவங்கள் கஞ்சா செடி வடிவங்கள் இல்லை. அது ஜப்பானிய மேப்பிள் இலைகளின் வடிவங்கள் (படம்) என்று வீவக விளக்கமளித்துள்ளது.
அந்த இலையின் வடிவத்தால் ஈர்க்கப்பட்டு அது உட்லீ கிளென் திட்டத்தின் புளோக்குகளின் முகப்பில் வடிவமைக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சமூக ஊடகத்தில் இந்த வடிவமைப்பை பதிவிட்ட பிறகு இது பொதுமக்களிடம் பேசும் பொருளானது.
சிங்கப்பூரில் கஞ்சா ஒரு தடைசெய்யப்பட்ட போதைப் பொருள். 500 கிராமுக்கு மேல் போதைப் பொருள் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
இந்த வடிவமைப்பு அந்தப் பேட்டையின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. முன்னர் அந்தப் பகுதி அல்காஃப் பூங்காவாக இருந்தது. அல்காஃப் பூங்கா சிங்கப்பூரில் ஜப்பானிய பாணியிலான முதல் பூங்காவாகும். ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது அந்தப் பகுதி போர்க் கைதிகளின் முகாமாக இருந்தது என்று வீவக பேச்சாளர் கூறினார்.