சுகாதாரப் பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை நிர்வகிக்கும் புதிய வழிகாட்டி நெறிமுறைகளுடன் சுகாதார அறிவியல் ஆணையம் தனது ஒழுங்குமுறை கட்டமைப்பைப் புதுப்பித்துள்ளது.
சுகாதார அமைச்சரும் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஓங் யி காங், செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 10) இந்த மேம்படுத்தப்பட்ட ‘சுகாதாரப் பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டார்.
இந்தக் கட்டமைப்பு 2021ஆம் ஆண்டு வழிகாட்டுதல்களின்கீழ் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். இது சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார அறிவியல் ஆணையம் ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்டது.
“பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்யும் அதேவேளையில், சுகாதாரத் துறையின் நெறிமுறைகள் மற்றும் விழுமியங்களைப் பாதுகாத்து, கண்டுபிடிப்புகளுக்குச் சிறந்த ஆதரவை வழங்கும் வகையில் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு போன்ற செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சிகளைக் கையாளுவதை இக்கட்டமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று அமைச்சர் ஓங் கூறினார்.
மார்ச் 9 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் 29வது அனைத்துலக மருத்துவ சாதனக் கட்டுப்பாட்டாளர்கள் மன்றத்தின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.
இப்புதிய வழிகாட்டுதல்கள், மருத்துவ நிறுவனங்கள் மருத்துவ ரீதியாகப் பாதுகாப்பான மற்றும் பயனுள்ள செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை உருவாக்கவும் செயல்படுத்தவும் உதவும். அதேநேரத்தில், உண்மையான உலக சுகாதாரச் சூழலில் இத்தொழில்நுட்பங்களை மதிப்பீடு செய்யவும் இது வழிவகை செய்யும்.
இதன் ஒரு சிறப்பம்சமாக, ‘மருத்துவக் கருவி விலக்குத் தொழில்நுட்பமாக ஏஐ மென்பொருள்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது மருத்துவ நிறுவனங்கள் குறைந்த அல்லது மிதமான அபாயம் கொண்ட செயற்கை நுண்ணறிவு மருத்துவக் கருவிகளை, வழக்கமான உரிமம் மற்றும் பதிவுத் தேவைகள் இன்றி உள்நாட்டுப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்த அனுமதிக்கிறது.
“அறிவியல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் சாத்தியமானவற்றுக்கும் சமூகம் மற்றும் பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியவற்றுக்கும் இடையே ஒரு பாலமாக ஒழுங்குமுறை அமைகிறது. இதன் பொருள், அபாயங்களைக் கவனித்துக்கொள்ளும் அதேவேளையில், கண்டுபிடிப்புகளை நாம் ஏற்றுக்கொள்ளும் வகையில் நமது ஒழுங்குமுறையைத் தொடர்ந்து மேம்படுத்துவதாகும்,” என்று அமைச்சர் ஓங் மேலும் கூறினார்.

