மார்ச் பள்ளி விடுமுறை முடிவுக்கு வந்தும் உட்லண்ட்ஸ் கடற்பாலத்தில் சிங்கப்பூருக்கு வரும் வாகனங்களால் செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அன்றிரவு 11.06 மணிக்கு OneMotoring இணையத்தளத்தில் இடம்பெற்ற கண்காணிப்புக் கருவி படம், ஜோகூரிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைக் காட்டியது.
குடிநுழைவு நடைமுறைகளை நிறைவேற்றுவதில் நீண்ட காத்திருப்பு நேரம் குறித்து வாகனமோட்டிகள் ஃபேஸ்புக்கில் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
உட்லண்ட்ஸ் கடற்பாலத்தில் சிங்கப்பூரை நோக்கிவரும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவது குறித்து குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் (ஐசிஏ) முன்னதாக எச்சரித்து இருந்தது.
பள்ளி விடுமுறை முடிந்தும் கடற்பாலத்தில் வழக்கத்திற்கு மாறாக போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்ததற்கான காரணம் தெரியவில்லை.
ஐசிஏ செவ்வாய்க்கிழமை பின்னிரவு 1.30 மணிக்கு வெளியிட்ட மற்றொரு ஃபேஸ்புக் பதிவில், உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் தணிந்திருப்பதாகத் தெரிவித்தது.