வரும் வாரயிறுதியிலும் செப்டம்பர் பள்ளி விடுமுறையிலும் நிலச் சோதனைச்சாவடிகள் வழியாக மலேசியாவுக்குச் செல்வோர் கூடுதல் பயண நேரத்தைக் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதற்கு முன்னர் ஜூன் பள்ளி விடுமுறையின்போது குடிநுழைவு அனுமதியைப் பெற்று வெளியேறுவதற்கு மூன்று மணி நேரம்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அதே போன்ற நிலைஅமை உட்லண்டஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் கூறியது.
ஜூன் பள்ளி விடுமுறையின்போது போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து இருந்ததாகவும், விடுமுறை தொடக்கத்தில் ஜூன் 1ஆம் தேதி கிட்டத்தட்ட 250,000 பேர் இரு சோதனைச்சாவடிகளைக் கடந்துசென்றதாகவும் ஆணையம் தெரிவித்தது.
வாரயிறுதியான ஜூன் 16ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதிவரை 1.2 மில்லியன் பேர் நிலச் சோதனைச்சாவடிகளைப் பயன்படுத்தியதாக அது கூறியது.
கார் வழியாகச் சென்றவர்கள் உச்சநேரங்களின்போது குடிநுழைவு அனுமதியைப் பெற்று வெளியேறுவதற்கு மூன்று மணி நேரம்வரை காத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.