ரமலான் பண்டிகையையொட்டி வரும் வாரயிறுதியில் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் உள்ள நிலச் சோதனைச் சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை சோதனைச் சாவடிகளில் அதிக கூட்டம் இருக்கும் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் கூறியது.
கார் மற்றும் பேருந்துகள் மூலம் பயணம் செய்வோர் கூடுதல் நேரம் காத்திருக்க நேரிடலாம் என்றும் ஆணையம் குறிப்பிட்டது.
ஜோகூர் பாலத்திலும் துவாஸ் பாதையிலும் போக்குவரத்து நெரிசல் கொவிட்-19க்கு முந்தைய நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2018ஆம் ஆண்டில், நோன்புப் பெருநாள் வார இறுதியின்போது, 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் நிலச் சோதனைச் சாவடிகளைக் கடந்தனர்.
நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 380,000 பேர் சோதனைச் சாவடிகள் வழி பயணம் செய்தனர். கார் மூலம் எல்லைகளைக் கடந்தவர்கள் ஏறத்தாழ 3 மணி நேரம் காத்திருக்க நேரிட்டது.
அண்மையில் புனித வெள்ளி விடுமுறையின் போது நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 235,000-க்கும் அதிகமானோர் எல்லைகளைக் கடந்தனர்.