மலேசியாவுக்கு காரில் செல்வோர், சிங்கப்பூரின் இரண்டு நிலவழிச் சோதனைச்சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசலை எதிர்பார்க்கலாம். துவாஸ் சோதனைச்சாவடியில் மட்டும் வாகனவோட்டிகள் ஐந்து மணி நேரம் அல்லது அதற்குமேல் வரை காத்திருக்க நேரிட்டது.
சனிக்கிழமை (மே 3) காலை உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகள் வழியாக அதிகமானோர் சிங்கப்பூரிலிருந்து ஜோகூருக்குச் சென்றதாகக் குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.
நண்பகல் 12.22 மணிக்கு ஆணையம் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், இரண்டாம் இணைப்புப் பாலத்தில் வாகனங்கள் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையில் இருப்பதாகவும் அது துவாஸ் சோதனைச்சாவடி வரை நீண்டுள்ளதாகவும் கூறியது.
“பயணிகள் ஐந்து மணி நேரம் அல்லது அதற்குமேல் வரை தாமதத்தை எதிர்பார்க்கலாம்,” என்று குறிப்பிட்ட ஆணையம், பயணம் மேற்கொள்வதற்கு முன்பு போக்குவரத்து நிலவரத்தைச் சரிபார்த்துக்கொள்ளும்படி நினைவூட்டியது.
வாக்களிப்பு தினம் சனிக்கிழமை (மே 3) இடம்பெற்றதால், திங்கட்கிழமை (மே 5) பள்ளி விடுமுறை எனக் கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. அதன்படி கல்வி அமைச்சு பள்ளி மாணவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இது நீண்ட வாரயிறுதியாகும்.