மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கின் கஸக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் பேராளர் குழுவில் உறுப்பினராக சிங்கப்பூருக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, முதல் முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தஞ்சோங் பகார் குழுத் தொகுதி உறுப்பினர் ஃபூ செஸியாங், செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 1) ஓர் அரசியல் பதவி வகிப்பவராகத் தமது பயணத்தைத் தொடங்கினார்.
ஜூலை 22ஆம் தேதி, பிரதமர் லாரன்ஸ் வோங்கால் அறிவிக்கப்பட்ட அண்மைய அமைச்சரவை மாற்றங்களின்போது, திரு ஃபூ மனிதவள அமைச்சு, வர்த்தக தொழில்துறை அமைச்சின் துணை அமைச்சராக உயர்த்தப்பட்டார்.
செயற்கை நுண்ணறிவும் (ஏஐ) ஊழியர்களின் வளர்ச்சியில் அதன் பங்கும்
திங்கட்கிழமை இரவு, சேனல் நியூஸ் ஏஷியாவுக்கு அளித்த பேட்டியில், திரு ஃபூ தமது புதிய பொறுப்புகளில், கலந்தாலோசித்து இணைந்து செயல்படும் அணுகுமுறையைக் கொண்டிருப்பதாக விவரித்தார்.
“வர்த்தகத் தலைவர்கள், மனிதவள தலைவர்கள் போன்ற தனியார் துறையினருடன் அரசாங்கம் எவ்வாறு கைகோர்த்துச் செயல்பட முடியும் என்பதைப் பார்ப்பதுதான் இதன் முக்கிய நோக்கம். அதன் விளைவாக, சக சிங்கப்பூரர்களுக்கு மேலும் நல்ல வேலைவாய்ப்புகளை வழங்கும் ஒரு தெளிவான முடிவு அனைவருக்கும் கிடைக்கும்,” என்று அவர் கூறினார்.
“இதுபோன்ற உறுதியான பலனைப் பலரும் காண விரும்புவார்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்றார் அவர்.
“மனிதவள அமைச்சில் எனது முன்னுரிமைகளில் ஒன்று, ஏஐயும் அது ஓர் ஊழியரின் வளர்ச்சிக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதையும் ஆராய்வதாகும்.
ஊழியர்களின் வளர்ச்சியில் ஏஐயை ஏற்றுக்கொள்வது எவ்வாறு பொருந்தும் என்பதை ஆராய்வதற்காக, மனிதவளம் மற்றும் மனித மூலதன மேம்பாட்டுத் துறைகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுவேன்,” என்று ஃபூ அந்தப் பேட்டியின்போது கூறினார்.
ஏஐயால் என்னென்ன பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதிலும், ஊழியர்கள் வளர்ச்சி அடைவதற்காக எவை பாதுகாக்கப்படும் என்பதிலும் தெளிவு இருக்க வேண்டும் என்பதை இது உள்ளடக்கியுள்ளது என்று அவர் விளக்கினார்.
இந்த விவரங்கள் ‘மிகவும் முக்கியமானவை’ என்று விவரித்த துணை அமைச்சர், ஏஐயை ஏற்றுக்கொள்வது இனி ஒரு கேள்வியாக இல்லாத நிலையில், ஊழியர்களும் அவர்களின் வளர்ச்சியும் எவ்வாறு, எங்கே பொருந்துகின்றன என்பதே இப்போது முக்கியம் என்று கூறினார்.
பணியிடங்களும் பெற்றோரும்
மனிதவள அமைச்சில் திரு ஃபூவின் மற்றொரு முன்னுரிமை, பெற்றோருக்கான பணிச்சூழல் ஆகும்.
இதுகுறித்து பேசிய துணை அமைச்சர், ஊழியர்கள் மற்றும் வணிகங்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் ஏற்பாடுகள் உட்பட, பணியிட நெகிழ்வுத்தன்மையின் பல்வேறு வடிவங்களை ஆராய்வதற்கு இடமிருப்பதாகத் தாம் நம்புவதாகக் கூறினார். மேலும், முதலாளிகளுக்கும் தங்களுக்கென சொந்த செயல்பாட்டுத் தேவைகள் உள்ளன என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார்.


