மரபுடைமை ஹோட்டலான ‘21 கார்பென்டர்’ அமைந்துள்ள கட்டடத்திற்குக் கடந்தகால கதையொன்று உள்ளது.
நான்கு கடைவீடுகளும் நவீன ஐந்து மாடிக் கட்டடமும் அடங்கிய அது, 1936ஆம் ஆண்டில் வெளிநாட்டு ஊழியர்களின் பணத்தில் அமைக்கப்பட்ட ‘சாய் ஹுவா செங் வீ கீ’ எனும் பணப் பரிமாற்ற வசதி அமைந்திருந்த பகுதியாகும்.
புலம்பெயர்ந்தோர் அங்கு சொந்த நாட்டுக்குப் பணம் மட்டும் அனுப்பவதில்லை. சொந்த நாட்டுக்குச் செய்தி அனுப்ப, அவர்கள் கடிதம் எழுதுவோரிடமும் அங்குதான் கட்டணம் செலுத்தினர்.
ஏப்ரலில் ‘21 கார்பென்டர்’ அதிகாரபூர்வமாகத் திறந்தபோது, அதன் பயனாளியாக அது ‘ஹெல்த்சர்வ்’ எனும் லாப நோக்கமற்றக் குழுமத்தைத் தேர்ந்தெடுத்தது.
இந்தக் குழுமம் வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சுகாதாரப் பராமரிப்பின் தொடர்பில் ஆதரவு அளிக்கிறது.
இன்று சிங்கப்பூர் இந்த நிலையை அடைந்துள்ளதற்கு வெளிநாட்டு ஊழியர்கள் உதவியுள்ளதாக, ‘21 கார்பென்டர்’ ஹோட்டலின் பொது நிர்வாகி தருன் கல்ரா கூறினார்.
“அவர்களில் பலருக்கு உணவும் வீடமைப்பும் தங்கள் முகவர்களின் மூலம் கிடைக்கப்பெறுகின்றன. இருப்பினும், மருத்துவ, பல்மருத்துவ, மனநலச் சுகாதாரப் பராமரிப்பு ஆகியவை கட்டுப்படியான விலையில் கிடைப்பதில்லை. அதனால் இந்த ஊழியர்களுக்கு ஒரே நிலையிலான பராமரிப்பு கிடைப்பதை உறுதிசெய்வது மிக முக்கியம். அதன் மூலம் அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழலாம்,” என்றார் அவர்.