ரிவர் வேலி கடைவீட்டில் நேர்ந்த தீவிபத்தின்போது சிறுவர்களைக் காப்பாற்றிய இந்திய ஊழியர்களைச் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம் சிறப்பித்தது.
ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி தூதரகம் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தது.
சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் டாக்டர் ஷில்பாக் அம்புலே கொடியேற்றி விழாவைத் தொடங்கிவைத்தார்.
மாணவர்கள் படைத்த பண்பாட்டு அங்கங்களையடுத்து, ரிவர் வேலி கடைவீட்டுத் தீச்சம்பவத்தில் சிறுவர்களைக் காப்பாற்றிய இந்திய வெளிநாட்டு ஊழியர்கள் எட்டுப் பேர் - நாகராஜன் அன்பரசன், சுப்பிரமணியன் சரண்ராஜ், இந்தர்ஜித் சிங், சின்னப்பா கண்ணதாசன், கோவிந்தராஜ் இளங்கேஸ்வரன், வருவேல் கிறிஸ்டோபர், முத்துக்குமார் முகேஷ், ரவிகுமார் - சிறப்பிக்கப்பட்டனர்.
அந்த ஊழியர்களுக்கு டாக்டர் அம்புலே பாராட்டுச் சான்றிதழும் பொன்னாடையும் வழங்கினார். அவர்களுக்கு அன்பளிப்புப் பைகளும் வழங்கப்பட்டன.
ஜூலை 26ஆம் தேதி தஞ்சோங் காத்தோங் சாலையில் ஏற்பட்ட புதைகுழியில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய ஏழு இந்திய வெளிநாட்டு ஊழியர்களால் வர இயலாவிட்டாலும், அவர்களின் செயல்கள் இந்தியாவின் பெயரை எங்கிருந்தாலும் கொடிகட்டிப் பறக்கச் செய்வதாக நிகழ்ச்சி நெறியாளர் மேடையில் பாராட்டினார். அவர்களையும் தூதரகம் சிறப்பிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
“நாட்டைக் கட்டியமைப்பதிலும், அதைச் சுத்தமாக வைத்திருப்பதிலும் வெளிநாட்டு ஊழியர்கள் அன்றாடம் ஆற்றும் பங்கை நாம் குறைவாக எடைபோடுகிறோம்.
“அதனால் சிங்கப்பூரின் வளர்ச்சியில் அவர்கள் ஆற்றும் பங்கையும், ரிவர் வேலி, தஞ்சோங் காத்தோங் சம்பவங்களில் அவர்கள் காட்டிய வீரத்தையும் நாங்கள் சிறப்பிக்க விரும்புகிறோம். இது நம் இந்திய பண்பாட்டுடன் தொடர்புடையது - நாம் உயிரின் மதிப்பை உணர்ந்தவர்கள்; எதையும் கண்டுகொள்ளாமல் நாம் உயிர்களைக் காப்பாற்ற விரைகிறோம்,” என்றார் டாக்டர் அம்புலே.
தொடர்புடைய செய்திகள்
“அதிகம் அறியப்பட்ட சம்பவங்களால் வெளிநாட்டு ஊழியர்கள் பாராட்டப்படும் அதேவேளையில், வெளியில் தெரியாத எத்தனையோ சம்பவங்களில் ஊழியர்கள் உதவியுள்ளனர் என்பதை மறக்கக்கூடாது. அவர்களையும் அங்கீகரித்து, சமூக நிகழ்ச்சிகளுக்கு வரவேற்று ஊக்கப்படுத்த வேண்டும்,” என்றார் ராயல் கிங்ஸ் குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரான திரு கேரி ஹாரிஸ்.
சிங்கப்பூருடனான 60 ஆண்டு அரசதந்திர உறவைப் பாராட்டும் வகையில் இந்தியத் தூதரகம், இந்தியாவின் தேசிய நாடகப் பள்ளியுடன் இணைந்து இந்திய நாடக விழாவை ஆகஸ்ட் 28 முதல் 30ஆம் தேதி வரை கேப்பிட்டல் தியேட்டரில் நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டது.