தேசிய நூலக வாரியத்தின் 30ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தனிப்பட்ட ஆவணங்களை நன்கொடையாக அளிக்க பல்வேறு தனிநபர்கள் முன்வந்துள்ளனர்.
இப்படி தங்களுக்குச் சொந்தமான ஆவணங்களை நன்கொடையாக அளித்தவர்களில் ஒருவர், உள்ளூர் இசைக்கலைஞர் பால்ராஜ் கோபால்கிருஷ்ணன்.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் கித்தார் குழுமத்தின் இணை வழிநடத்துநரும் இசையமைப்பாளருமான திரு பால்ராஜ், நிதியாண்டு 2024ல் 63 ஆவணங்களைத் தேசிய நூலக வாரியத்துக்கு நன்கொடையளித்துள்ளார்.
காலஞ்சென்ற இசைக்கலைஞரும் வழிகாட்டியுமான அலெக்ஸ் அபிஷேகநாதன் 2023ல் இறப்பதற்குமுன் திரு பால்ராஜ் அவரிடமிருந்து இந்த ஆவணங்களைப் பெற்றிருந்தார்.
இவற்றில் பெரும்பாலானவை இசைக் குறிப்புகள் என்றார் திரு பால்ராஜ்.
நன்கொடை அளிக்கப்பட்டவற்றில் நான்கு ஆவணங்கள், திரு அபிஷேகநாதனின் சொந்த இசையமைப்பின் குறிப்புகளைக் கொண்டுள்ளவை. திரு அபிஷேகநாதன் வாங்கி வைத்திருந்த ஆவணங்களும் அவற்றில் அடங்கும்.
திரு அபிஷேகநாதன், “கிட்டாரின் தந்தை” எனப் போற்றப்படும் சிங்கப்பூர் கிட்டார் கலைஞர். அவருக்கு 1988ல் கலாசாரப் பதக்கம் (Cultural Medallion) வழங்கப்பட்டது. அவர் தன் வாழ்வின் ஐம்பது ஆண்டுகளைக் கிளாசிக்கல் கிட்டாருக்கே அர்ப்பணித்தவர்; பிறருக்குக் கற்பிக்கவும் செய்தார்.
திரு அபிஷேகநாதன் கைப்பட எழுதிய குறிப்புகள் சிலவற்றை அவர் தாமாக முன்வந்து தேசிய நூலகத்துக்கு 2015ல் நன்கொடையாக வழங்கியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
திரு அபிஷேகநாதன் என்யுஎஸ் கிட்டார் குழுவில் வழிநடத்துநராக இருந்தபோது திரு பால்ராஜ் பல்கலைக்கழக மாணவராகவும் குழு உறுப்பினராகவும் இருக்கிறார். திரு அபிஷேகநாதன் வகுத்த வழியில் செல்லும் திரு பால்ராஜ், தற்போது இசை கற்பிக்கிறார்.
“அவரது நினைவாக, ஆண்டுதோறும் மார்ச் மாதம் என்யுஎஸ் நடத்தும் இசைக் கச்சேரியில் அவருடைய இசைப்படைப்புகளில் ஒன்றை வாசிக்க விரும்புகிறேன்,” என்றார் திரு பால்ராஜ்.
“ஜப்பானிய கிட்டார் முறையான ‘நிபோரி’ இசைவடிவை திரு அபிஷேகநாதன் சிங்கப்பூருக்குக் கொண்டுவந்தவராவார். அவர் தென்கிழக்காசிய இசையில் பெரும் நாட்டம் கொண்டவர்,” என்றார் திரு பால்ராஜ்.
“திரு அபிஷேகநாதன் பலமுறை என்னை வீட்டுக்கு அழைத்து எனக்குத் தனிப்பட்ட, இலவச இசை வகுப்புகளை வழங்கியுள்ளார்,” என்றார் திரு பால்ராஜ்.
‘ஹுவான் யின்-வணக்கம்’ எனும் அவர் உருவாக்கிய சீன-தமிழ்க் கலவை இசையும் மிகவும் புகழ்பெற்றது.
நன்கொடையளிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் தேசிய நூலக வாரியம் மின்னிலக்கப்படுத்துகிறது. பொதுமக்கள் இந்த ஆவணங்களைப் பார்வையிடலாம்.
திரு பால்ராஜ் கோபாலும் அவரது குழுவினரும் அக்டோபர் 24ஆம் தேதியன்று தேசிய நூலக வாரியத்தின் நன்கொடையாளர் பாராட்டு விழாவில், திரு அபிஷேகநாதனின் சொந்தப் பாடல்களை வாசித்தனர்.
“கித்தார், நடன நிகழ்ச்சிகள் புத்துணர்ச்சியளிக்ககூடியவையாக அமைந்தன,” எனத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ பாராட்டினார்.
ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோ அண்ட் ஜூலியட்’ நூலின் பி கிருஷ்ணன் மொழிபெயர்ப்பைத் தேசிய நூலக வாரியத்தினரும் நடித்து உயிர்ப்பித்தனர்.
“சிங்கப்பூரர்களே முழுமையாக உணர்ந்து பாராட்டக்கூடிய “ரோமியோ ஜூலியட்டின் சிங்கப்பூர் தயாரிப்பு” எனப் பாராட்டினார் அமைச்சர் டியோ.

