சுவீடனைச் சேர்ந்த புகழ்பெற்ற ஆடை அணிகலன் நிறுவனமான ‘எச்&எம்’, அதன் சிங்கப்பூர் அலுவலகத்தில் பணியாற்றிய 80 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
சிங்கப்பூரில் இயங்கிய அதன் தலைமையகத்தை மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு இடமாற்றும் வேளையில், அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணிநீக்கம் குறித்த அறிவிப்புகள் ஊழியர்களுக்கு மே 11ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் வட்டாரச் செயல்பாடுகளை மறுஆய்வு செய்யும் நடைமுறைகளின் ஒரு பகுதியாக, ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நிறுவனம் விளக்கம் அளித்தது.
இந்த வட்டாரத்தில் சிங்கப்பூர் உட்பட அந்நிறுவனத்துக்கு 256 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இங்குப் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியளர்களின் முழு விவரங்களை நிறுவனம் வெளியிடவில்லை. அவர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தும் வழங்கப்படும் என்பதை மட்டும் நிறுவனம் குறிப்பிட்டது.
“வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாங்கள் தொடர்ந்து செயல்படுகிறோம். நிறுவனம் செயல்திறன்மிக்க வகையில், நீக்குப்போக்குடன் இயங்குவதை உறுதிசெய்ய, மறுஆய்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்,” என்று ‘எச்&எம்’ நிறுவனம் கூறியது.
‘எச்&எம்’ நிறுவனம் 2011ஆம் ஆண்டில் சாமர்செட்டில் அதன் முதல் கடையைத் திறந்தது.
ஏறத்தாழ 10 ஆண்டுகள் செயல்பட்ட அதன் ‘ஐயோன் ஆர்ச்சர்ட்’ கிளை, 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்டது. ‘தெம்பனிஸ் மால்’ கிளை 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் பொங்கோலில் இருந்த ‘வாட்டர்பாய்ன்ட்’ கிளை 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதமும் மூடப்பட்டன.
சிங்கப்பூரில் அதன் ஆறு கிளைகள் தொடர்ந்து இயங்கிவருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
தொழிற்சங்கத்தின் கருத்து
‘எச்&எம்’ நிறுவனம் எவ்விதத் தொழிற்சங்கத்தையும் சாராத ஒன்று எனச் சிங்கப்பூர் கைமுறை, வணிக ஊழியர் சங்கம் (SMMWU) வெள்ளிக்கிழமை (மே 15) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
எனினும், தனிப்பட்ட முறையில் அதன் ஊழியர்கள் தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தால் அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என்பதை அது உறுதிப்படுத்தியது.

