மத்திய கிழக்குப் போரின் விளைவுகள் உலகம் முழுவதும் பரவிவரும் நிலையில் பயங்கரவாதம் உள்ளிட்ட பாதுகாப்பு அபாயங்களை எதிர்கொள்ள சிங்கப்பூரின் உள்துறைக் குழு தயாராக இருக்க வேண்டும்.
உள்துறைக் குழு அதிகாரிகள் பதவி ஏற்பு நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் கா. சண்முகம் இதனைத் தெரிவித்தார். அந்த நிகழ்வு திங்கட்கிழமை (ஏப்ரல் 13) ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
போரின் தொடக்கம் முதலே இஸ்லாமியப் புரட்சிப் பாதுகாப்புப் படையும் அதன் ஆதரவு அமைப்புகளும் இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகள்மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க, யூத மற்றும் இஸ்ரேலியத் தளங்களை இலக்காகக் கொண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு கூறிய தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு. சண்முகம், அண்டை நாடுகளில் ஹமாஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் ஊடுருவி இருப்பது குறித்துப் பல்லாண்டுகளாகவே வெளியாகி வரும் தகவல்களைச் சுட்டிக்காட்டினார்.
“இத்தகைய மறைமுக அமைப்புகள் மத்திய கிழக்குடன் நின்றுவிடுவதில்லை. இவற்றை நாம் அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம்,” என்றார் அவர்.
நாட்டிற்குள் நுழையும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் சிங்கப்பூருக்கு ஓர் அபாயமாகத் தோன்றுகிறது என்றும் திரு. சண்முகம் குறிப்பிட்டார்.

