பார்க்வே பரேடில் உள்ள ‘என்டியுசி ஃபேர்பிரைஸ்’ கடையில் வாங்கிய தின்பண்டப் பொட்டலத்தில் உயிருள்ள பூச்சிகள் ஊர்ந்து சென்றதாக சாமுவேல் டான் எனும் ஆடவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இதன் தொடர்பில் சில புகைப்படங்களையும் காணொளிகளையும் அவர் பதிவிட்டார்.
அவற்றில், தின்பண்டப் பொட்டலத்திற்குள் சிறகுகள் கொண்ட பூச்சிகள் நகர்வதைக் காண முடிந்தது. அத்திப் பழம், பாதாம் பருப்பு போன்றவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட தின்பண்டம் அது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்குப் பதிலளித்த ‘ஃபேர்பிரைஸ்’ குழுமம் இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்று கூறியது.
கையிருப்பில் உள்ள பொட்டலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் குறை ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்தத் தின்பண்டம் குறித்து வேறு யாரிடமிருந்தும் புகார் வரவில்லை என்று அது குறிப்பிட்டது.
அந்தத் தின்பண்டத்தை விநியோகித்த நிறுவனத்திடம் விசாரணை நடத்தப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருடன் தொடர்பில் இருப்பதாகவும் ‘ஃபேர்பிரைஸ்’ குழுமம் தெரிவித்தது.
உணவுத்தரம், உணவுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை மிகவும் தீவிரமாகக் கருதுவதாக அது குறிப்பிட்டது.
உயரிய உணவுப் பாதுகாப்புத் தரநிலையைக் கொண்டிருப்பதில் கடப்பாடு கொண்டுள்ளதாக குழுமம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
‘ஃபேர்பிரைஸ்’ கடைகளில் வாங்கிய உணவுப் பொருளின் தரம் குறித்து அதிருப்தி ஏற்பட்டால் உரிய ரசீதுடன் சென்று அதை வாங்கிய கடையிலேயே மாற்றிக்கொள்ளும்படி வாடிக்கையாளர்களை குழுமம் கேட்டுக்கொண்டது.


