சிங்கப்பூரில் வெயில் 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாட்டி வதைக்கிறது. அதிலிருந்து தன் ஊழியர்களைப் பாதுகாக்க சாங்கி விமான நிலைய குழுமம் சில புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
”கடந்த வாரம் சாங்கி விமான நிலையத்தில் ஊழியர்கள் ஓய்வெடுக்கும் இடத்தில் பொது தொலைபேசி சாவடி போன்ற இயந்திரத்தைப் பார்த்தேன். அதில் இருந்த ஒரு பொத்தானை அழுத்தியவுடன் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. வெயிலுக்கு அது மிகவும் இதமாக இருந்தது,” என்று அங்கு பணியாற்றும் 36 வயது செர்டிஸ் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரியான இர்மான் ஹமீது கூறினார்.
புதிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இரு ‘புத்துணர்ச்சிக் கூண்டுகள்’ சோதனை முறையில் நிறுவப்பட்டன. ஒவ்வொரு முறையும் அந்தப் பொத்தானை அழுத்தும்போது 3½ நிமிடங்களுக்கு குளிர்ந்த காற்று வீசும். புறஊதாக் கதிர்கள் மூலம் கிருமிகளைக் கொல்லும் ஒரு செயல்முறையின்மூலம் காற்று தூய்மையாக்கப்படுகிறது.
ஒவ்வொரு கூண்டும் 2.5 மீட்டர் உயரம் கொண்டது. அதிலிருந்து வரும் குளிர்ந்த காற்று ஒரே நேரத்தில் ஐந்து ஊழியர்களைக் குளிர்விப்பதோடு, நாள் முழுவதும் அது இயங்கவல்லது. இந்த நடவடிக்கை மூலம் 30,000 ஊழியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓடுபாதை உள்ளிட்ட வெளிப்புறங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்கள் வேலை நேரம் முழுவதும் குளிரூட்டப்பட்ட கட்டடத்தை எளிதாக அணுக முடியாது. இதனால், சாங்கி விமான நிலையம் பல ஆண்டுகளாக அவர்களுக்கு பல்வேறு வகை குளிரூட்டும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இருப்பினும், சிங்கப்பூரில் வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், ஓடுபாதையில் வேலை செய்பவர்களைக் கவனித்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று சாங்கி விமான நிலைய செயல்பாட்டுக் கட்டுப்பாட்டுப் பிரிவு நிர்வாக இயக்குநர் இயோ கியா தை கூறினார்.
வெளிப்புறங்களில் வேலைசெய்யும் ஊழியர்களுக்கு இலவச குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன. இது ஜூன், மாதங்களுக்கு இடையில் வழக்கமாக இடம்பெறும் நடிவடிக்கைதான். ஆனால், தற்போது வெப்பமான வானிலை நிலவுவதால் அது நீட்டிக்கப்படும் சாத்தியமுள்ளது.