கையில் மட்டையுடன் இருவர் அல்லது நால்வர் விளையாடக்கூடிய ‘பிக்கல்பால்’ என்ற விளையாட்டு மிகப் பிரபலமடைந்துவருகிறது. பலரையும் அது கவர்ந்திருந்தாலும் விளையாட்டாளர்கள் ஏற்படுத்தும் சத்தம், குடியிருப்பாளர்களை வெறுப்படைய வைத்துள்ளது.
அதன் விளைவாக வீவக பேட்டைகளில் 2024 ஜனவரி முதல் 2025 ஆகஸ்ட் வரையில் 701 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) தெரிவித்தார்.
வீவகவின் பொது வளாகங்களில் விளையாடப்படும் பிக்கல்பால் ஏற்படுத்தும் சத்தத்தைக் கட்டுப்படுத்த வழிகாட்டிகள் அல்லது விதிமுறைகள் விதிப்பதற்கு திட்டங்கள் உள்ளனவா என்று பாட்டாளிக் கட்சியின் செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேமஸ் லிம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது அமைச்சர் அவ்வாறு கூறினார்.
திரு சீ அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், நகர மன்றங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளைக் குறிப்பிட்டார். குடியிருப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆலோசனை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அடித்தள அமைப்புகளுடன் இணைந்து விளையாட்டாளர்கள் குடியிருப்பாளர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. மைதானங்களில் விளையாடக் கூடிய நேரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
தற்போதுள்ள சமூக சத்தக் கட்டுப்பாட்டு வழிகாட்டியின்படி குடியிருப்பாளர்கள் இரவு 10.30 மணிமுதல் மறுநாள் காலை 7.30 மணிவரை அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். இது அண்டைவீட்டாருக்கும் பொது இடங்களுக்கும் வீவக மைதானங்களில் நடக்கும் விளையாட்டுகளுக்கும் பொருந்தும் என்றார் அமைச்சர்.