ஷங்ரிலா ஹோட்டலில் உள்ள உணவகம் ஒன்றின் உணவுச் சுகாதார தரநிலை ‘ஏ’இலிருந்து ‘சி’க்குக் குறைக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டின் இறுதியில் அந்த உணவகத்தில் சாப்பிட்ட 10 பேர் நோய்வாய்ப்பட்டதே அதற்குக் காரணம்.
டிசம்பர் 26ஆம் தேதி ‘தி லைன்’ உணவகத்தில் சாப்பிட்ட பிறகு அவர்களுக்கு இரைப்பைக் குடலழற்சிக்கான அறிகுறிகள் ஏற்பட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.
இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அது சொன்னது. வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை அறிகுறிகளில் அடங்கும்.
சிங்கப்பூர் உணவு அமைப்பும் சுகாதார அமைச்சும் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் எந்தவொரு சுகாதாரக் குறைபாடுகளும் அடையாளம் காணப்படவில்லை.
இருப்பினும், உணவகத்தின் சுகாதாரத் தரத்தை செப்டம்பர் 8ஆம் தேதியிலிருந்து 12 மாதங்களுக்கு அமைப்பு குறைத்தது. உணவகம் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தைத் தொடர்ந்து எச்சரிக்கை நடவடிக்கையாக ஹோட்டல் உடனடியாக கடலுணவு விநியோகிப்பாளர்களை மறுஆய்வு செய்து அவர்களை மாற்றியதாக ஷங்ரிலா சிங்கப்பூர் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
ஆரஞ்சு குரோவ் ரோட்டில் அமைந்துள்ள அந்த ஹோட்டல் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது.