‘ஐஜூஸ்’ தானியங்கி இயந்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட உறிஞ்சுகுழலை எச்சிலாக்கியதைப் படம்பிடித்ததன் தொடர்பிலான வழக்கை ஒத்திவைக்குமாறு அரசாங்கத் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பிரெஞ்சு நாட்டவரான டிடியே கஸ்பார்ட் ஓவன் மெக்ஸ்மிலன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரது மாணவர் அனுமதிச் சீட்டு ரத்துச் செய்யப்படுமா என்பது குறித்து குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்திடம் அரசுத் தரப்பு சரிபார்த்து வருகிறது. அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுக்தேவ் கவுர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (ஜூலை 13) அந்தத் தகவலைத் தெரிவித்தார்.
19 வயது மாணவர் இதற்கு முன்னர் திங்கட்கிழமை குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
ஐஜூஸ் தானியங்கி விற்பனை இயந்திரத்தில் இருந்த உறிஞ்சுகுழலை எடுத்து நாவால் நக்கிவிட்டுப் பின்னர் அதனை மீண்டும் உறிஞ்சுகுழாய் வழங்கும் பெட்டிக்குள்ளேயே வைப்பதை மெக்ஸ்மிலனே படம்பிடித்ததாகப் புகார் கூறப்பட்டது. அதன் தொடர்பில் அவர்மீது சேதம் விளைவித்தல், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தாம்சன் ரோட்டில் உள்ள கோல்ட்ஹில் நிலையத்தில் மெக்ஸ்மிலன் அந்தக் குற்றங்களைப் புரிந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன.
பின்னர் அவர் சமூக ஊடகத்தில் தனது செயலைப் பதிவிட்டார். அது இணையவாசிகளிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது.
அவரின் செயலால் நிறுவனம் அந்த இயந்திரத்தில் இருந்த 500 உறிஞ்சுகுழல்களையும் மாற்ற வேண்டியிருந்தது.
இம்மாதம் 30ஆம் தேதி அவர் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று நம்பப்படுகிறது.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது $2,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படக்கூடும்.

