முஸ்லிம் விவகாரங்களுக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் சமூக ஊடகங்களில் துடிப்பாகச் செயல்பட்டு இளையர்களுடன் தொடர்பில் இருக்க முற்படுவதாகக் கூறியுள்ளார்.
சமூக ஊடகக் கணக்குகளில் வரும் செய்திகளுக்கும் அவர் முடிந்த அளவு பதிலளிப்பதாகக் கூறினார்.
“அவர்கள் கேட்கப்பட விரும்புகிறார்கள். வெளிப்படையான உரையாடலையும் விரும்புகின்றனர்,” என்று புதன்கிழமை (ஜூன் 4) பேராசிரியர் ஃபைஷால் சொன்னார்.
தாம் இளையர் அல்லர் என்ற அவர், இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயல்பட்டு இளையர்களுடன் தொடர்பில் இருக்க முயல்வதையும் பகிர்ந்துகொண்டார்.
மலாய்/ முஸ்லிம் சமூகத்துக்கான குறிக்கோளை எட்ட பேராசிரியர் ஃபைஷால் கடைப்பிடிக்கும் சில வழிகளில் அவையும் அடங்கும். ஆனால், அதை எட்ட சிறிது காலம் ஆகும் என்றார் 56 வயது பேராசிரியர் ஃபைஷால்.
விஸ்மா கேலாங் செராய் சமூக நடுவத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லிக்குப் பதிலாகப் பேராசிரியர் ஃபைஷால் முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் பதவியை ஏற்றார்.
இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான பேராசிரியர் ஃபைஷால் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைகழகத்தின் சொத்துச் சந்தைப் பிரிவின் இணைப் பேராசிரியராக இருந்தார்.
தமது அண்மைய பதவியேற்பை அடுத்து மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்ததைப் பேராசிரியர் ஃபைஷால் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
2018ஆம் ஆண்டிலிருந்து 2002ஆம் ஆண்டு வரை முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சராகப் பொறுப்பு வகித்த தமது முன்னோடிகளான திரு மசகோஸ், ஓய்வுபெற்ற அமைச்சர் டாக்டர் யாக்கோப் இப்ராஹிம் ஆகியோருக்குப் பேராசிரியர் ஃபைஷால் நன்றி தெரிவித்தார்.
“இந்தப் பொறுப்பு எளிதானதன்று என எனக்குத் தெரியும், இருந்தாலும் பலர் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
2006ஆம் ஆண்டு தமது 38 வயதில் அரசியலில் கால் பதித்த பேராசிரியர் ஃபைஷால், 2011ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின் நீ சூன் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பு வகித்து மூன்று தவணை காலம் சேவையாற்றினார்.
“மலாய்/முஸ்லிம் சமூகமும் சிங்கப்பூரர்களும் இந்த முயற்சியில் என்னுடன் தொடர்ந்து இருப்பதால் நான் தனியாக இருக்கமாட்டேன்,” என்று பேராசிரியர் ஃபைஷால் குறிப்பிட்டார்.