கேரோசல் இணையத்தளம் வழியாக ரோலெக்ஸ் கைக்கடிகாரம் விற்பனைக்கு இருப்பதாகக் கூறி, திருந்தாமல் தொடர்ந்து பலமுறை மோசடியில் ஈடுபட்டு வந்த ஒருவருக்கு மீண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மோசடி செய்தல், நம்பிக்கை மோசடி மற்றும் தனது ‘சிங்பாஸ்’ கணக்கை விற்பனை செய்தது ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளை 34 வயது ஃபூ சியாங் வீ ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு 18 மாதங்கள், 49 நாள்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஃபூ இதேபோன்ற பாணியைப் பயன்படுத்தி 2021ஆம் ஆண்டிலும் கடிகாரம் வாங்க விரும்பியவர்களை ஏமாற்றி $7,000 மோசடி செய்தார். மேலும், 2018ஆம் ஆண்டில் மெரினா பே சேண்ட்ஸ் ஹோட்டல் தொகுப்புச் சலுகைகளை முன்னிறுத்தி மோசடியில் ஈடுபட்டார்.
தோ பாயோவில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக நடுவத்தில் உள்ள கோஃபு உணவங்காடி மேலாளராக ஃபூ பணியாற்றியபோது, 2025ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் $29,000க்கும் அதிகமான பணத்தைத் திருடினார்.
இது அம்பலமானபோது மன்னிப்பு கேட்டு பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறிய ஃபூ, பின்னர் தலைமறைவானார்.
ஃபூ புரிந்த குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடுவது குறித்து நீதிமன்றம் பரிசீலித்தது. இருப்பினும், ஃபூ நீண்டகாலமாக வேலையில்லாமல் இருப்பதாலும், திருடப்பட்ட பணத்தைத் திருப்பிச் செலுத்தும் நிதி வசதி அவரிடம் இல்லாததாலும் நீதிபதி அந்த உத்தரவைப் பிறப்பிக்கவில்லை. மோசடிக் குற்றத்திற்காக அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

