40 வயதுகளில் உள்ள தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சிங்கப்பூரில் அதிகரிப்பு

40 வயதுகளில் உள்ள தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சிங்கப்பூரில் அதிகரிப்பு

2 mins read
625d4160-053e-48ec-9027-4d73a16bd549
41 வயது ஜோசஃபின் ஃபூங், அவரது கணவரான 42 வயது வின்ஸ்டன் யிப், காம்பஸ்வேல் லிங்கில் உள்ள அவர்களின் இல்லத்திற்கு அருகில், தங்களின் ஏழு வார இரட்டைக் குழந்தைகளான அன்யா (இடது), அனெட் இருவரையும் ஏந்தியுள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குறைவான சிங்கப்பூர் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒரு காலகட்டத்தில், 40 வயதுகளில் உள்ள அதிகமான பெண்கள் இந்தப் போக்கிற்கு எதிராக அமைதியாகச் செயல்படுகின்றனர்.

2025ல், 40 முதல் 44 வயதுக்குட்பட்ட 1,000 பெண்களுக்கு 9.6 குழந்தைகள் பிறந்தன. இது 2015ல் 8.9 குழந்தைகளாகவும் 2005ல் 6.2 குழந்தைகளாகவும் இருந்தது.

இந்த வயதுப் பிரிவில் உள்ள பெண்களுக்கான வயது சார்ந்த கருவுறுதல் விகிதத்தில் (ஏஎஸ்எஃப்ஆர்) ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பு, 45 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களிடமும் காணப்படுகிறது. 2025ல் இந்த வயதுப் பிரிவில் 1,000 பெண்களுக்கு 0.5 குழந்தைகள் பிறந்தன. இது 2015ல் 0.4 குழந்தைகளாகவும் 2005ல் 0.2 குழந்தைகளாகவும் இருந்தது.

ஏஎஸ்எஃப்ஆர் என்பது ஒரு குறிப்பிட்ட வயதுப் பிரிவில் உள்ள 1,000 பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.

இதற்கு முற்றிலும் மாறாக, இளம் பெண்களிடையே ஏஎஸ்எஃப்ஆர் குறைந்து வருகிறது.

25 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களிடையே 2025ஆம் ஆண்டில் 1,000 பெண்களுக்கு 38.3 குழந்தைகள் பிறந்தன. இது 2015ல் 68.7 குழந்தைகளாகவும் 2005ல் 80.7 குழந்தைகளாகவும் இருந்த எண்ணிக்கையை விடக் குறைவு.

30 முதல் 34 வயதுக்குட்பட்டவர்களில், 2025ஆம் ஆண்டில் 1,000 பெண்களுக்கு 70 குழந்தைகள் பிறந்தன. இது 2015ல் 98.5 ஆகவும், 2005ல் 89.2 ஆகவும் இருந்த எண்ணிக்கையை விடக் குறைவு.

பிப்ரவரி மாத இறுதியில் வெளியிடப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான தரவுகள் தற்காலிகமானவை என்று புள்ளிவிவரத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

வயதான பெண்கள் தாமதமாகத் திருமணம் செய்து கொள்வதாலும், பெற்றோராவதாலும் அவர்களிடையே வயது முதிர்ந்த கருவுறுதல் விகிதம் அதிகரித்துள்ளது. அதே சமயம் 20 மற்றும் 30 வயதுகளில் உள்ளவர்களிடையே அது குறைந்துள்ளது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியின் பேராசிரியர் ஜீன் யெங் கூறினார்.

கிடைக்கப்பெற்ற அண்மைய புள்ளிவிவரங்களின்படி, முதல் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்களின் சராசரி வயது 2004ல் 29.3 ஆண்டுகளில் இருந்து, 2024ல் 31.9 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. இந்தப் புள்ளிவிவரங்கள், பெற்றோரில் குறைந்தபட்சம் ஒருவர் சிங்கப்பூரராகவோ நிரந்தரவாசியாகவோ இருக்கும் குழந்தைகளுக்குப் பிறந்தவை ஆகும்.

செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சையை நாடும் 40 வயதுகளில் உள்ள பெண்கள்

40 வயதுகளில் உள்ள பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மற்றொரு காரணம், 2020ஆம் ஆண்டில் செயற்கைக் கருத்தரிப்பு (ஐவிஎஃப்) மற்றும் பிற துணை இனப்பெருக்க தொழில்நுட்ப சிகிச்சைகளுக்கான 45 வயது வரம்பு நீக்கப்பட்டதே ஆகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வயது வரம்பு நீக்கப்பட்டதால், இங்கு பெண்கள் ஐவிஎஃப் மூலம் குழந்தை பெற முயல்வதற்கு இப்போது ‘உயர்ந்தபட்ச வயது வரம்பு’ எதுவும் இல்லை என்று சுகாதார அமைச்சு முன்னதாகக் கூறியிருந்தது.

குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வமுள்ள, ஆனால் கருத்தரிப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளும் தம்பதியினருக்கு, ஆரம்பகால சுகாதாரப் பரிசோதனை மற்றும் துணை இனப்பெருக்கத் தொழில்நுட்பத்திற்காக, கலந்தாலோசனையில் கூடுதல் உதவி, மானியங்கள் அல்லது சிறப்பு விடுப்பு ஆகியவற்றை நாம் வழங்க வேண்டும் என்று பேராசிரியர் ஜீன் யெங் கருத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்