ஈரான் போர், கப்பல் போக்குவரத்து வழித்தடங்களைச் சீர்குலைப்பதால் சிங்கப்பூருக்கு அதிகக் கப்பல்கள் வருகின்றன. ஆயினும் எரிபொருள் நிரப்புவதற்காக இங்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
எரிபொருள் நிரப்பச் சில கப்பல்கள் வரும் அதேவேளை பழுதுபார்ப்பு, பணியாளர்கள் மாற்றம், சரக்குப் பரிமாற்றம் போன்ற காரணங்களாலும் கப்பல்கள் சிங்கப்பூர் வருகின்றன.
சென்ற மாதம் (ஏப்ரல்) 10,873 கப்பல்கள் சிங்கப்பூர் வந்தன. இது ஆண்டு அடிப்படையில் மூன்று விழுக்காடு அதிகம். மார்ச் மாதம் 11,591 கப்பல்கள் இங்கு வந்ததாகச் சிங்கப்பூர்க் கடல்துறை துறைமுக ஆணையத்தின் தரவுகள் காட்டுகின்றன. அது 8.7 விழுக்காடு அதிகரிப்பு.
ஓராண்டோடு ஒப்பிடுகையில் ஒவ்வொரு மாதமும் அதிகமான கப்பல்கள் இங்கு வருவது மார்ச் மாதத்திலிருந்து நீடிக்கிறது.
எரிபொருளைச் சேமிப்பதற்காகச் சில கப்பல்கள் மெதுவான பயணத்தை மேற்கொள்வதாகவும் மத்திய கிழக்கு மோதல் காரணமாக எரிபொருள் விலைகள் நிலையற்றதாக இருப்பதால் எரிபொருள் கொள்முதலில் கப்பல்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் நிபுணர்கள் கூறினர்.
உலகின் ஆகப் பெரிய எரிபொருள் நிரப்பும் மையமான சிங்கப்பூரில், கடல்துறை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றே கருதப்படுகிறது.

