அனைத்து அளவுகோள்களின்படி நேர்மறையான திசையில் செல்லும் பன்முகத்தன்மைமிக்க சமுதாயத்துடன் இந்தியச் சமூகம் சென்றுள்ளதாக தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மற்றும் சுகாதார அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி சுட்டியுள்ளார்.
தமிழ் முரசின் கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்த டாக்டர் ஜனில், சிங்கப்பூரர்கள் பன்முகத்தன்மையைத் தங்கள் பலமாகக் கருதி வருவதாகக் கூறினார்.
சிங்கப்பூரர்கள் வெவ்வேறு கலாசாரங்கள் பற்றி கற்றுக்கொள்வதில் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அத்துடன், பல்வேறு சமூகங்களில் நன்னம்பிக்கையை உருவாக்குகின்றனர், என்று தம் அறிக்கையில் கூறிய டாக்டர் ஜனில், மதிப்புமிக்க நம் இன நல்லிணக்கத்தை நாம் கட்டிக்காத்து அதன் அடிப்படையில் எதிர்காலத்தைக் கட்டமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
வலுவான சமூக ஒருங்கிணைப்பு, அதிகரிக்கும் நம்பகத்தன்மை, பிறரால் ஏற்றுக்கொள்ளக்கூடியத்தன்மை ஆகியவற்றில் சிங்கப்பூர் இந்தியர்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். இந்த முடிவுகளை ஆதரிக்கும் வகையில், ஒன்பீப்பள்.எஸ்ஜி, கொள்கை ஆய்வுக் கழகத்துடன் திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் சில புள்ளிவிவரங்கள் அடங்கியுள்ளன:
இந்திய சிங்கப்பூரர்களின் மீதான நம்பிக்கை: தேசிய நெருக்கடி காலகட்டங்களின்போதும் பாதிக்கு மேற்பட்ட இந்தியர்கள் நம்ப முடியும் என 68.6 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
நெருக்கடியாக சூழலில் பிற இனத்தோரை நம்பத் தயாராக உள்ளவரின் விழுக்காடு 57.3 என்று முன்னதாக 2013ல் பதிவு செய்யப்பட்டது.
வேலையிடம்: சிங்கப்பூரில் பிறந்த இந்திய இனத்து ஊழியருடன் சக ஊழியராகச் சுமுகமாகச் செயல்பட முடிவதாக 90.3 விழுக்காட்டினர் கூறினர். இந்த விகிதம், சீனர்களுக்கான விகிதத்துடனும் (94.4%) மலாய்க்காரர்களுக்கான விகிதத்துடனும் ( 91.3%) நெருக்கமானது.
உழைப்பும் உயர்வும்: வேலையிடத்தில் உயர்பதவிகளை அடைய மற்ற இனத்தவர்களைக் காட்டிலும் இந்தியர்கள் அதிகம் உழைக்கவேண்டும் என்பதை 21.7 விழுக்காட்டினர் நம்புவதாகக் குறிப்பிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
பன்முகத்தன்மைக்கான ஆதரவு: 71.1 விழுக்காட்டினர், இனப் பன்முகத்தன்மையைப் பயனளிக்கக்கூடிய ஒன்றாகக் கருதுகின்றனர். இது, 2018ல் பதிவான 66.7 விழுக்காட்டைவிட அதிகம்.
குறிப்பாக, பன்முகத்தன்மையை இந்தியர்களும் மலாய்க்காரர்களும் அதிகம் மதிப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது.

