மண்டாய் வனப்பகுதியில் பாம்பு ஒன்றைக் கையாண்ட விதம் குறித்து விசாரிக்கப்படுவோரில் தேசியப் பூங்கா வாரியத்தின் ஊழியரும் ஒருவர் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் பொதுப் பூங்காக்களில் வனவிலங்குகளைப் பிடிப்பதும் அவற்றை வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்வதும் சட்டவிரோதம்.
இவ்வாண்டு மே 26ஆம் தேதி, மண்டாய் வனப்பகுதிக்குச் சிலர் சென்றனர். அவர்களில் ஒருவர் மரத்திலிருந்து ஒரு பாம்பை எடுத்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் காட்சிகள் மே 31ஆம் தேதி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டன. அவருடன் இருந்த மற்றோர் ஆடவர் சிறிய பாம்புடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள நின்றதையும் அதில் காண முடிந்தது.
அவர்களுடன் மேலும் நால்வர் இருந்ததாகத் தெரிகிறது.
ஒரு மீட்டருக்குமேல் நீளமான பாம்பு மரத்திற்கு மீண்டும் செல்ல முயல்வதை ஃபேஸ்புக் பதிவில் காண முடிகிறது.
தேசியப் பூங்கா வாரியத்தின் அமலாக்க, விசாரணைக் குழுவிற்கான இயக்குநர் ஜெசிக்கா குவோக், வனப்பகுதியில் இருந்தவர்களில் வாரியத்தின் ஊழியரும் அடங்குவார் என்று உறுதிப்படுத்தினார்.
அந்த ஊழியர் சுய விருப்பத்தின்படி அங்குச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.
சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் அவர் மேலும் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
வனவிலங்குகளைப் பிடித்தது, அவற்றை வேறு இடங்களுக்கு மாற்றியது, அவற்றுக்கு உணவளித்தது போன்ற குற்றங்களுக்கு $5,000வரை அபராதம் விதிக்கப்படக்கூடும்.

