சிங்கப்பூரரான 26 வயது சின் டுங் ஷெங்கை இன்ஸ்டகிராமில் 334,00க்கும் மேற்பட்டோர் பின்பற்றுகின்றனர். செந்தோசாவில் உள்ள பங்களா ஒன்றில் புகுந்து திருடியதை வெள்ளிக்கிழமை (மார்ச் 7) அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், போலி ஆவணங்களைச் சமர்ப்பித்தது, ஏமாற்றியது போன்ற குற்றங்களையும் அவர் ஒப்புக்கொண்டார்.
போலியான கட்டண ரசீதுகளைக் காட்டி ‘அயோன் ஆர்ச்சர்ட்’ கடைத்தொகுதியை ஏமாற்றியதன் மூலம் ஏறத்தாழ $76,900 மதிப்பிலான பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்ட குற்றமும் அவற்றில் அடங்கும்.
அந்தக் குற்றச்செயல்களில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கும் இடையில் அவர் ஈடுபட்டார். 2023 டிசம்பர் முதல் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
செந்தோசாவில் வாடகைக்கு விடப்படவிருந்த ஒரு பங்களாவைப் பார்க்க 2023ஆம் ஆண்டில் சின் சிலமுறை சென்றார்.
பின்னர் அங்கிருந்து ‘லூயி விட்டோன்’ ஆடம்பரப் பொருள்கள் உட்பட சில பொருள்களைத் திருடியதாகக் கூறப்பட்டது. ஏறத்தாழ $200,000 மதிப்பிலான அப்பொருள்களை அவர் இணையத்தில் விற்பனை செய்தார்.
2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும் 2021 ஏப்ரலுக்கும் இடையே 25க்கும் மேற்பட்ட உறுப்பினர் கணக்குகள் மூலம் போலியான கட்டண ரசீதுகளைச் சமர்ப்பித்து ‘அயோன் ஆர்ச்சர்ட்’ கடைத்தொகுதியை அவர் ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
மார்ச் 19ஆம் தேதி சின்னுக்குத் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

