வெறித்தனமான ஒரு நாயின் முகம் என்றனர் சிலர். சிடுசிடு கிழவனின் முகம் என்றனர் சிலர்.
அவர்கள் வருணித்தது ஒரு மீனை.
உள்ளூரில் வனவிலங்குச் சுற்றுப்பயணங்களுக்கு ஏற்பாடு செய்துவரும் ‘தி அன்டேம்ட் பாத்ஸ்’ என்ற குழு, அண்மையில் பதிவேற்றம் செய்த காணொளி ஒன்றில் அந்த மீன் தோன்றியது.
பெருத்த கண்கள், சிறுத்த கருவிழி கொண்ட ஒரு மீன் மேல் நோக்கியவாறு கேமராவைப் பார்த்த வண்ணம் இருப்பதை அந்தக் காணொளி காட்டுகிறது.
ஆழமில்லா நீரில் மீனின் முகம் மட்டுமே மணலிலிருந்து வெளியே தெரிவதாகக் காணொளி உள்ளது.
அதன் பிறகு, மணலுக்குள் மீன் புதையுண்டு கொள்வதாகக் காணொளி அமைந்துள்ளது.
காணொளியில் தோன்றும் அந்த மீனைக் கிட்டத்தட்ட 54.2 மில்லியன் பார்வையிட்டுள்ளனர்.
அத்துடன் 1.3 மில்லியன் பேரைக் காணொளி கவர்ந்தும் உள்ளது.
இந்நிலையில் ‘நியூ யார்க் போஸ்ட்’, ‘டெய்லி மெயில்’, ‘இந்தியா டைம்ஸ்’ போன்ற பல செய்தி ஊடகங்களின் கண்களில் இந்த மீன் காணொளி பட்டுவிட்டது.
சிங்கப்பூரின் வடக்குக் கரை நீரில் ஏப்ரல் 26ஆம் தேதி இந்த மீனைக் கண்டதாக ‘தி அன்டேம்ட் பாத்ஸ்’ குழுவை நிறுவிய டென்னிஸ் சான் கூறினார்.

