போதையில் வாகனம் ஓட்டி, விபத்து நடந்த இடத்தில் நிற்காமல் சென்ற ஒட்டுநர் பிறகு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்த போதைப்பொருள் கலந்த கேபோட் மின்சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையும், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் சாங்கி விமான நிலையம் நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் (பிஐஇ) சனிக்கிழமை (செப்டம்பர் 20) மாலை 5.50மணிக்கு விபத்து பற்றிய தகவல் கிடைத்ததாகத் தெரிவித்தனர். புக்கிட் தீமா விரைவுச் சாலைக்கு (பிகேஇ) செல்லும் வழித்தடத்துக்கு முன் தீவு விரைவுச்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளும் கார் ஒன்றும் சம்பந்தப்பட்டிருந்தன என்று காவல் துறை கூறியது. மோட்டார் சைக்கிள் ஓட்டிய 60 வயது ஆடவர், டான் டோக் செங் மருத்துவமனைக்கு சுயநினைவுடன் கொண்டுசெல்லப்பட்டார்.
கைது செய்யப்பட்ட வாகன ஓட்டுநரிடமிருந்து மின்சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. சுகாதார அறிவியல் ஆணையத்திடம் மின்சிகரெட் சம்பந்தப்பட்ட குற்றம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஸ்டோம்ப் சமூக ஊடகப் பதிவில் அனாக் புக்கிட் மேம்பாலச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது மற்றொரு வாகனத்தில் இருந்த கேமராக் கருவி விபத்தைப் பதிவு செய்துள்ளது.ஒரு லாரியைக் கடந்து இடது சாலைத் தடத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு வாகனம், வலதுபுறமாக தடம் மாறும்போது, ஒரு மோட்டார் சைக்கிளை மோதியது பதிவில் தெரிந்தது.
மோட்டார்கைக்கிளை ஓட்டிய ஆடவர் சாலையில் விழுந்து உருளும் நிலையில் மோதிய வாகனம் நில்லாமல் சென்றதும் பதிவாகியுள்ளது. காவல்துறை விசாரணை தொடர்கிறது.