முதியோருக்கும் நோயாளிகளுக்கும் ஏற்ற உணவைத் தயாரிக்கும் உள்ளூர் நிறுவனத்தை $11.2 மில்லியனுக்கு வாங்க மற்றோர் உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனம் திட்டமிடுகிறது.
‘ஐவாவ் டெக்னாலஜி’ எனும் அந்தத் தொழில்நுட்ப நிறுவனம், ‘த ஜென்ட்டல் குரூப்’ நிறுவனத்துடன் உடன்பாடு ஒன்றைச் செய்துகொண்டதாக வியாழக்கிழமை (ஏப்ரல் 30) அறிவித்தது.
விழுங்குவதற்குச் சிரமப்படுவோருக்கான உணவு, பராமரிப்புச் சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற சமூக நிறுவனம், ‘த ஜென்ட்டல் குரூப்’.
நெருக்கடிக்காலத்தில் எச்சரிக்கைக் கருவிகளை உருவாக்குவதில் பெயர் பெற்றது ‘ஐவாவ்’. தனியாகவோ குடும்ப ஆதரவு இல்லாமலோ வசிக்கும் முதியோர், ஒரே ஒரு பொத்தானைத் தட்டுவதன் மூலம் அவசரகாலச் சேவைகளை அணுகுவதற்கு அத்தகைய கருவிகள் உதவியாக இருக்கும்.
‘ஐவாவ்’ நிறுவனத்தின் கிளை நிறுவனமான ‘படி ஆஃப் பேரன்ட்ஸ்’ அந்தக் கருவிகளை உருவாக்கியுள்ளது. அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பான ‘கவ்டெக்’ திட்டத்தின்கீழ் தீவு முழுதும், முதியோருக்கான கம்பியில்லா அந்த எச்சரிக்கைக் கருவிகள், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் வாடகை வீடுகளில் பொருத்தப்பட்டுள்ளன.
விழுங்குவதில் சிரமம், சிறுநீரக நோய், நீரிழிவு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உண்பதற்கு எளிதான, மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட உணவு வகைகளை ‘த ஜென்ட்டல் குரூப்’ வழங்குகிறது. சுகாதாரப் பராமரிப்பு, முதியோர் பராமரிப்புத் துறைகளுக்கான மறுவாழ்வுத் தீர்வுகளையும் அது வழங்குகிறது.
முதியோர் பராமரிப்புத் தீர்வுகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நிறுவனத்தை வாங்கவிருக்கிறது ‘ஐவாவ்’.
சிங்கப்பூரின் வேகமாக மூப்படையும் மக்கள்தொகை காரணமாக, 2030ஆம் ஆண்டிற்குள் இங்கு வசிப்போரில் கிட்டத்தட்ட கால்வாசிப் பேர் 65 வயதை எட்டியவர்களாக இருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

