அண்டை வீட்டுக்காரரை உலோகக் கம்பியால் தாக்கிய 81 வயது ஆடவருக்கு 7 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவா லை என்ற அந்த ஆடவர் தம்மீது மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
சுவா தாக்கியதில் அண்டை வீட்டுக்காரரான சான் பூன் ஹீயின் கண்ணில் கடுமையான காயம் ஏற்பட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி நடந்தது. அன்று காலை சுவா தமது வீட்டில் இருந்து கம்பியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். அப்போது அவர்முன் வந்த 67 வயது சானை சுவா தாக்கினார்.
அதனால் சானின் வலது கண்ணில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. அதன்பின்னர் சுவாவை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
காயம் காரணமாக சானுக்கு ஒரு மாதத்திற்கு மேல் பார்வை குறைபாடு இருந்தது.
இருவருக்கும் இடையே முன்பகை இருந்ததாகவும் அதனால் இத்தாக்குதல் நடந்ததாகவும் காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது.
ஒருவரை வேண்டுமென்றே தாக்கினால் அக்குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, 5,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

