பெண்ணின் ஆடைகளை அணிந்துகொண்டு மாணவர் ஒருவரை மானபங்கம் செய்த முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு மூவாண்டுகள் சிறைத்தண்டனையும் நான்கு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அதோடு அவர், வெவ்வேறு வேளைகளில் காணொளி அழைப்பின்வழி 15 வயது ஆண்கள் இருவரை பாலியல்ரீதியான செயல்களைச் செய்யத் தூண்டி அவற்றைப் பதிவும் செய்திருக்கிறார்.
குற்றவாளியான 40 வயது ஷாரிஸால் ஷாஃபீ தன்மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட பிறகு வெள்ளிக்கிழமை (மே 29) தீர்ப்பளிக்கப்பட்டது. மானபங்கம் செய்தது, பாலியல் நடவடிக்கைகளைக் காணொளியில் பதிவுசெய்தது ஆகியவை தொடர்பான குற்றச்சாட்டுகள் அவற்றில் அடங்கும்.
அச்சம்பவங்கள் 2023ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்தன.
வேறு மூவர் சம்பந்தப்பட்ட, இதேபோன்ற செயல்கள் தொடர்பான 10 குற்றச்சாட்டுகளும் தீர்ப்பளிக்கும்போது கருத்தில்கொள்ளப்பட்டன.
சிங்கப்பூர் காவல்துறையில் 17 ஆண்டுகள் பணியாற்றிய ஷாரிஸால், முன்னதாக முன்களப் பணிகளிலிருந்து நீக்கப்பட்டார். பிறகு 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர் பதவி விலகினார். காவல்துறை இத்தகவல்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
2024 ஏப்ரல் 18ஆம் தேதி ஷாரிஸால் பெண்ணைப்போல் ஆடை அணிந்து மாணவரை மானபங்கம் செய்தார். 10 நாள்கள் கழித்து அவரைக் காவல்துறை அடையாளம் கண்டு கைது செய்தது.
அதன் பின்னர் அவர் பல்வேறு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

