90 வயது முதியவரைக் கீழே தள்ளிவிட்டு மரணம் ஏற்படுத்திய மற்றோரு முதியவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நிகழ்வதற்கு முன்பு இருவருக்கும் ஒருவரையொருவர் தெரியாது என்று அரசாங்க தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், மார்சிலங்கில் தாம் வசிக்கும் குடியிருப்புக் கட்டடத்துக்கு அருகில் திரு சூவை டோ முன்பு பார்த்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
திரு சூ, நினைவாற்றல் இழப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்.
அத்துடன் அவர் நடமாட சிரமப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
நடந்து செல்ல அவர் கைத்தடி பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி காலை 11.30 மணிக்கு முன்பு, டோ தமது வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அப்போது மார்சிலிங் சாலை புளோக் 3ன் தரைத்தளத்தில் உள்ள இருக்கையில் திரு சூ அமர்ந்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
டோ தம்மிடம் $100 கடன் வாங்கியதாக அவரைப் பார்த்து திரு சூ திடீரென்று கத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்டு டோ கோபமடைந்தார்.
இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
தமது கைத்தடியைப் பயன்படுத்தி டோவைத் தாக்க திரு சூன் முயன்றார்.
ஆனால் அந்தக் கைத்தடியை டோ பற்றிக்கொண்டார்.
இருவருக்கும் இடையே கைகலப்பு மூண்டது.
அப்போது திரு சூவை டோ தள்ளிவிட்டார்.
கீழே விழுந்த திரு சூவின் தலையில் காயம் ஏற்பட்டது.
திரு சூவுக்கு உதவி செய்யாமல் டோ வீடு திரும்பினார்.
அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அதே நாள் இரவு 8.30 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அந்தப் பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை அலசி ஆராய்ந்து டோவை அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதியன்று அதிகாலை 2 மணி அளவில் டோவின் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர் அவரை அங்கு கைது செய்தனர்.
சம்பவம் நிகழ்ந்தபோது டோவுக்கு 72 வயது.
தற்போது அவருக்கு 73 வயது.
அவருக்கு வியாழக்கிழமை (பிப்ரவரி 13) இரண்டு ஆண்டுகள், நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

