2023ஆம் ஆண்டில் சூ சாவ் ஓட்டிய கார் மோட்டார் சைக்கிளோட்டி மீது மோதியது.
இதில் அந்த மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம் அடைந்தார்.
இரண்டு ஆண்டுகள் கழித்து, குடிபோதையில் வாகனம் ஓட்டியபோது சூ பிடிபட்டார்.
இந்த இரண்டு குற்றங்களைப் புரிந்ததற்காக அவருக்குத் திங்கட்கிழமையன்று (ஜூன் 9) ஐந்து வாரச் சிறைத் தண்டனையுடன் $5,000 அபராதம் விதிக்கப்பட்டன.
சீன நாட்டவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான 39 வயது சூவுக்கு வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டது.
வேறொரு குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு ஒரு வாரச் சிறையும் விதிக்கப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின்கீழ் அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
வேலை அனுமதிச் சீட்டு விண்ணப்பம் செய்தபோது அவர் பொய்த் தகவல் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
2023ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதியன்று தெம்பனிஸ் விரைவுச்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது சூ ஓட்டிய கார் மோதியது.
இதில் மோட்டார்சைக்கிளோட்டியான 53 வயது திருவாட்டி சின் நியோக் லியானுக்கு கையில் எலும்பு முறிவு, கால்களில் காயங்கள் ஆகியவை ஏற்பட்டன.
அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
அதன் பிறகு அவருக்கு இயன் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதியன்று கிட்டத்தட்ட 6 லிட்டர் பீர் அருந்திவிட்டு வாகனம் ஓட்டினார் சூ.
குலிமார்ட் சாலையில் போக்குவரத்துக் காவல்துறையினர் சோதனை நடத்தியபோது அவர் சிக்கினார்.