காவல்துறை அதிகாரி ஒருவர் அவரது வேலையிடத்தில் அனுமதியில்லாமல் ரகசியத் தரவுத்தளத்திற்குள் நுழைந்து வேறோர் ஆடவர் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ள அவரது நண்பருக்கு உதவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரையன் டே வெய் சுவான் பின்னர் தாம் கண்டுபிடித்தவற்றைப் பற்றி அவரது நண்பர் லின்கன் போ சொங் டீயிடம் கூறினார். அவ்வாறு செய்ததால் காவல்துறை அதிகாரி என்ற முறையில் அவர் மீது வைக்கப்பட்டிருந்த நம்பிக்கையைச் சீர்குலைத்துக்கொண்டார் டே.
30 வயதான டே தம்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். கடந்த செவ்வாய்க்கிழமை அவருக்கு மூன்று வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
டே 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேவையிலிருந்து தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அவர் பதவி விலகியதாகவும் காவல்துறை அறிக்கை ஒன்றில் கூறியது.