மது அருந்திவிட்டு சிமெண்ட் கலவை வாகனத்தை ஓட்டிய சௌரிராஜுலு கருணாகரன் எனும் இந்திய நாட்டவர் தூங்கி விட்டார். அதன் காரணத்தால் பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து நேர்ந்தது. அதில் பலருக்குக் காயம் ஏற்பட்டது. ஒருவருக்கு இடுப்பு எலும்பு முறிந்தது.
மதுபோதையில் வாகனமோட்டிய குற்றத்துக்காகவும் கவனக்குறைவாக வாகனமோட்டி பலருக்குக் காயம் ஏற்படுத்திய குற்றத்துக்காகவும் அந்த 45 வயது ஆடவருக்கு நேற்று பத்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவர் விடுதலையானவுடன் 14 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மே 18ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு விபத்து நடந்தபோது, சௌரிராஜுலு இன்ஃபினிட் லாஜிஸ்டிக்ஸ் அண்ட் டிரேடிங் நிறுவனத்தின் ஊழியராக இருந்தார் என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் நிக்கோல் இங் தெரிவித்தார்.
தூக்கக் கலக்கத்தில் இருந்த அவர், போக்குவரத்து விளக்கு வரும்போது திடீரென வாகனத்தை நிறுத்தியதால் பின்னால் வந்த பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.