தமது மனைவியுடன் கடைத்தெருவில் பொருள்கள் வாங்கிக்கொண்டிருந்த வேளையில் வேறு பெண்களைத் தகாத முறையில் ரகசியமாகப் புகைப்படமெடுத்த ஆடவருக்கு நீதிமன்றம் 11 வார சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
2024ஆம் ஆண்டில் விவோ சிட்டி கடைத்தொகுதியில் அச்சம்பவம் நடந்தது.
புவா தியாம் குவான் என்ற அந்த 57 வயது ஆடவர் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) நீதிமன்றத்தில் தம்மீது சுமத்தப்பட்டக் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சம்பவம் நடந்த நாளன்று முதலில் அவர் வாட்சன்ஸ் மருந்துக் கடையில் அங்கிருந்த ஒரு பெண்ணுக்குத் தெரியாத வகையில் அச்செயலைப் புரிந்தார். பிறகு அதே கடைத்தொகுதியில் இருந்த திரைப்பட அரங்க வளாகத்தில் மற்ற பெண்கள் நடமாடிக்கொண்டிருந்தபோது அதே செயலைச் செய்தார். அவரது நடவடிக்கையைக் கண்ட இரு பெண்கள் அவரைக் கையும் களவுமாகப் பிடித்து கைப்பேசியை பறிமுதல் செய்தனர்.
அங்கு வந்துசேர்ந்த காவல்துறையினர் அவரது கைப்பேசியை சோதனை செய்ததில் அதனுள் பல தகாத காணொளிளை நூற்றுக்கணக்கில் அவர் பதிவிறக்கம் செய்திருந்தது கண்டறியப்பட்டது.
இதுபோன்ற கள்ளத்தனமாக அந்தரங்கப் புகைப்படங்கள் எடுக்கும் குற்றத்துக்கு இரண்டு ஆண்டு சிறை, பிரம்படி போன்ற தண்டனைகள் விதிக்கப்படும்.

