நிதிப் பற்றாக்குறையை எதிர்நோக்கியதையடுத்து, எஸ்ஐஏ எஞ்சினியரிங் நிறுவனத்திலிருந்து மடிக்கணினிகளைத் திருட தொழில்நுட்பர் ஒருவர் திட்டமிட்டார்.
சின்னவன் தமிழரசன் எனும் அந்த 32 வயது ஆடவர் பொறியியல் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்தார். திருடியதற்காக செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) அவருக்கு ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கட்டடத்திலிருந்து திருடியது, அத்துமீறி ஓரிடத்துக்குள் புகுந்து கொள்ளையடித்தது ஆகிய இரு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். இந்தியாவைச் சேர்ந்த சின்னவன், சம்பவம் நிகழ்ந்தபோது சிங்கப்பூர் பொறியியல் நிறுவனம் ஒன்றுக்கு வேலை செய்துவந்ததும் சாங்கியில் அமைந்திருக்கும் எஸ்ஐஏ எஞ்சினியரிங் அலுவலகத்துக்கு வேலை காரணமாக அனுப்பப்பட்டிருந்ததும் நீதிமன்ற ஆவணங்களில் தெரியவந்தன.
வேலைக்காக அவருக்கு நிறுவனத்தின் ‘சர்வர் ரூம்’ எனப்படும் கணினிச் சேவையக அறைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி சின்னவன் திருடுவதற்காகத் தான் தீட்டிய திட்டத்தைச் செயல்படுத்த முடிவெடுத்தார்.
கணினிச் சேவையக அறியில் குளிரூட்டிகளைப் பழுதுபார்த்தபோது அவர் கிட்டத்தட்ட 3,475 மதிப்பிலான மடிக்கணினிகளைத் திருடினார். சில நாள்களுக்குப் பிறகு அவர் 16 ‘ஹார்ட் டிரைவ்’ கருவிகளையும் திருடினார்.

