தூக்கக் கலக்கத்தில் டாக்சியை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவருக்கு 10 மாதங்கள் சிறை

தூக்கக் கலக்கத்தில் டாக்சியை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவருக்கு 10 மாதங்கள் சிறை

தமிழ்முரசு

15 Aug 2023 - 6:18 pm

1 mins read

தூக்கக் கலக்கத்தில் டாக்சியை ஓட்டி நின்று கொண்டிருந்த மற்றொரு காரின்மீது மோதி விபத்து ஏற்படுத்திய 45 வயது சான் சின் லீக்கு 10 மாதச் சிறைத்தண்டனையும் எட்டு ஆண்டுகள் வாகனம் ஓட்டத்தடையும் திங்கட்கிழமை விதிக்கப்பட்டது.

இந்த விபத்தில் அந்தக் காரின் ஓட்டுநர் மருத்துவமனையில் உயிரிழந்தார் எனக் கூறப்பட்டது.

சம்பவத்தன்று லீ, மதுவும் பெனடால் மருந்தும் உட்கொண்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

அவர் தன்மீது கவனம் இல்லாமல் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

தண்டனை வழங்கும்போது அவர்மீது சுமத்தப்பட்ட இரண்டாவது குற்றச்சாட்டான டாக்சியில் பயணம் செய்த பயணிக்குக் கடுமையான காயத்தை ஏற்படுத்தும் குற்றமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

2022ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தீவு விரைவுச் சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

குற்றஞ்சாட்டப்பட்ட லீ, தன் நண்பர்களுடன் அன்று மது அருந்தியிருந்தார்.

அவர்களில் ஒருவரை தீவு விரைவுச்சாலை வழியாக டெக் வாய்-க்கு அழைத்துச் செல்லும்போது நின்றுகொண்டிருந்தகாரின்மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார் எனச் சொல்லப்பட்டது.

மோதிய வேகத்தில் அந்தக் காரின் ஒட்டுநர் தூக்கிவீசப்பட்டார். அவருக்கு வயது 40. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்