ஹின் லியோங் எண்ணெய் வர்த்தக நிறுவனத்தின் 84 வயது நிறுவனர் லிம் ஊன் குயின் செய்த மேல்முறையீட்டை ஏற்று, அவருக்கு உயர்நீதிமன்றம் பதின்மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
முன்னர் விதிக்கப்பட்ட பதினேழரை ஆண்டுகளைக் காட்டிலும் அது 4 ஆண்டுகள் குறைவு.
ஓ.கே.லிம் என்ற அழைக்கப்படும் அவர்மீது, 2024ஆம் ஆண்டு நவம்பரில் ஏமாற்று, மோசடிக்காக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சிங்கப்பூரில் நடந்துள்ள வர்த்தக நிதி மோசடி வழக்குகளில் மிகக் கடுமையானது அது என்று வழக்கறிஞர்கள் கூறினர்.
நீண்ட மாவட்ட நீதிமன்ற வழக்கு விசாரணைக்குப் பின்னர், அவர் ‘எச்எஸ்பிசி’ வங்கியை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
இரண்டு பொய்யான எண்ணெய் விற்பனை ஒப்பந்தங்களுக்காக, அவர் அந்த வங்கியை ஏமாற்றி, ஹின் லியோங்கிடம் 111.6 மில்லியன் டாலரை (S$145 மில்லியன்) வழங்கச் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதோடு, பொய்யான ஒப்பந்தங்களில் ஒன்றுக்கு மோசடி ஆவணங்களைத் தயார்செய்யும்படி முன்னாள் ஊழியர் ஒருவருக்கு அவர் உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அவரது வயதைக் கருத்தில் கொண்டும், அவர் கணிசமான அளவில் பணத்தைத் திரும்பக் கொடுத்ததாலும் நீதிபதி ஹூ ஷியாவ் பெங் அவரது சிறைக்காலத்தைக் குறைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவர் பணத்தைக் கொடுத்தபின், ‘எச்எஸ்பிசி’ வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு 56 மில்லியன் டாலரிலிருந்து 29.7 மில்லியன் டாலர் எனப் பாதியாகக் குறைக்கப்பட்டது.
இருப்பினும், ஒரு நாள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றக் கருணை காட்டும்படி லிம் வைத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.

