வியட்னாமிய மாது ஒருவர் சிங்கப்பூர் ஆடவருக்கும் மற்றொரு வியட்னாமியப் பெண்ணுக்கும் போலித் திருமணத்தை நடத்தியிருந்தார்.
லெ துய் டிரியு என்ற அந்த மாதிற்கு செப்டம்பர் 13ஆம் தேதி ஒன்பது மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு, அந்தப் போலித் திருமணத்தை ஏற்பாடு செய்ததற்கு அவருக்கு $4,000 அபராதமும் விதிக்கப்பட்டதாக குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணையம் தெரிவித்தது.
கடந்த 2016ஆம் ஆண்டில், ஹூ குவீ ஹுவா, 52, வுவொங் தி மை டுயென், 32, ஆகியோருக்கு இடையே போலித் திருமணம் நடத்த முன்வந்தார் 41 வயதான லெ. அப்போதுதான், வுவொங் சிங்கப்பூரில் தங்கியிருக்கும் காலத்தை நீட்டிக்க முடியும்.
அதற்குக் கைமாறாக, ஹூவுக்கு $8,000 முதல் $10,000 வெள்ளிவரை கிடைக்கும். சூதாட்டப் பழக்கத்தாலும், அந்த நேரத்தில் பணம் தேவைப்பட்டதாலும், அந்த சிங்கப்பூரர் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதாக ஆணையம் கூறியது.
அந்தப் போலித் திருமணத்தை நடத்த, வுவொங்கின் தாயார் லுவொங் தி மை ஹாங்கின் ஒப்புதலையும் லெ பெற்றார்.
கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி, அந்தத் திருமணம் பதிவுசெய்யப்பட்டது. இருப்பினும், அவர்கள் திருமண வாழ்க்கையை நடத்தவில்லை என்று ஆணையம் கூறியது.
சென்ற 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி, வுவொங் தாங்கள் தெரிவித்த இடத்தில் தங்கவில்லை என்பதை ஆணையம் கண்டுபிடித்த பிறகு, ஹூவும் வுவொங்கும் கைதுசெய்யப்பட்டனர்.


