‘சிங்கப்பூரர்கள் ஒற்றுமையுடன் இருந்தால் எந்தச் சவாலையும் சமாளிக்கலாம்’

‘சிங்கப்பூரர்கள் ஒற்றுமையுடன் இருந்தால் எந்தச் சவாலையும் சமாளிக்கலாம்’

3 mins read
தேசிய தினப் பேரணி உரைக்குப் பிந்திய கலந்துரையாடலில் ஜனில் புதுச்சேரி
287fbd1b-7779-4762-803e-67351d26bbf6
இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களைச் சேர்ந்த தொண்டூழியர்களுடன் நடத்தப்பட்ட தேசிய தினப் பேரணி உரைக்குப் பிந்திய கலந்துரையாடலில் டாக்டர் ஜனில் புதுச்சேரி (இடமிருந்து 3வது) , திரு முரளி பிள்ளை (இடது), திரு விக்ரம் நாயர். - படம்: அனுஷா செல்வமணி

தேசிய தினப் பேரணி உரையில் வெளியிட்ட தகவல்களுக்கு மக்களிடமிருந்து பலதரப்பட்ட கருத்துகள் எழுந்தன. அவற்றை நன்கு புரிந்துகொண்டு சமூகத்தினருக்கு சரியான முறையில் புரிய வைப்பது ஓர் அடித்தளத் தலைவரின் முக்கியப் பொறுப்பு என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மற்றும் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார்.

“சமூகத்துடனும் குடியிருப்பாளர்களுடனும் நெருங்கிய தொடர்பில் இருக்கும் இந்திய சமூகத் தலைவர்கள், மக்களுடன் இணைந்து அரசாங்கம் அடுத்து செயல்படுத்தும் கொள்கைகளை ஒட்டி பின்னூட்டம் தர வேண்டும்,” என்றார் அவர்.

இந்தியர் நற்பணிச் செயற்குழு தொண்டூழியர்களுடன் நடத்தப்பட்ட தேசிய தினப் பேரணி உரைக்குப் பிந்திய கலந்துரையாடலில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஜனில் இதனைக் கூறினார்.

மக்கள் கழக நற்பணிப் பேரவையின் ஏற்பாட்டில் மக்கள் கழக தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களின் அடித்தளத் தலைவர்களும் இந்திய அமைப்பினரும் பங்குபெற்றனர்.

டாக்டர் ஜனிலுடன் சட்டம், போக்குவரத்து துணை அமைச்சர் முரளி பிள்ளை, செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் இருவரும் கலந்துகொண்டனர்.

மக்கள் கழக நற்பணிப் பேரவை ஆலோசகருமான டாக்டர் ஜனில், “சமூகம் ஒன்றுபட்டால் கண்டிப்பாக மக்கள் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வுகாண முடியும். சிங்கப்பூரில் இந்தியச் சமூகம் சிறியதாக இருந்தாலும் அது கண்டுள்ள வளர்ச்சி அளப்பரியது,” என்று குறிப்பிட்டார்.

மூப்படைதல், முதியவர்களைக் குறிவைக்கும் முதுமைக்கால மறதி, விலைவாசி உயர்வு, தாய்மொழி புழக்கம், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயன்பாடு, கல்வி, பணியிடப் பிரச்சினைகள், பெற்றோர் விடுப்பு ஆகிய தலைப்புகளை ஒட்டி கலந்துரையாடலில் பேசப்பட்டன.

இருமொழிக் கல்வி பற்றி பேசிய திரு விக்ரம் நாயர், “உயர் தாய்மொழி பாடம் பற்றி தேசிய தினப் பேரணி உரையில் பகிரப்பட்ட தகவல் மாணவர்களுக்கு ஊக்கம் தந்திருக்கும். இது, பிள்ளைகள் தாய்மொழி மீது வைத்துள்ள ஆர்வத்தைத் தூண்டும். அது மட்டுமின்றி, ஆசிரியர்களும் பள்ளிகளில் மாணவர்களை தாய்மொழி போட்டிகளில் கலந்துகொள்ள ஊக்குவிக்க வேண்டும்,” என்றார்.

“விலைவாசி உயர்வு குறித்து மக்களுக்குக் கைகொடுக்கும் விதமாக சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் உள்ளன. சிங்கப்பூரில் ஊழியரணி நிலைமை இறுக்கமாக உள்ளதால் வெளிநாட்டு ஊழியர்களின் தேவை சிங்கப்பூருக்கு மிக அவசியம். மேலும், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மூலம் தங்களை மேம்படுத்திக்கொண்டால் அவர்களால் உறுதியாக ஒரு பணியில் அமர முடியும்,” என்று திரு முரளி பிள்ளை கூறினார்.

சுகாதாரம், கல்வி ஆகியவற்றைப் பற்றி கருத்துரைத்த டாக்டர் ஜனில், “சிங்கப்பூரில் முதுமைக்கால மறதிக்கு அதிக அளவில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதற்கு அரசாங்கமும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. எடுத்துக்காட்டாக, ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’, ‘நலமாக மூப்படைதல் எஸ்ஜி’ செயல்திட்டம், துடிப்பாக மூப்படைதல் குழு போன்ற பல திட்டங்கள் நடப்பில் உள்ளன.

“பலதுறைத் தொழிற்கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் முழு நேரப் பணியில் அமர்வதற்கு முன் பல ஐயங்களைக் கொண்டுள்ளனர். வேலை கிடைக்காமல் போய்விடுமோ, வெளிநாட்டு ஊழியர்களுடன் போட்டியிடும் சூழல் வந்துவிடுமோ போன்றவை அவற்றில் அடங்கும். இந்த ஐயங்கள் தேவையில்லை. சிங்கப்பூர் மாணவர்களுக்கு எப்போதும் வாய்ப்புகள் இருக்கும்,” என்று அவர் உறுதியளித்தார்.

கலந்துரையாடலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரு விக்ரம் நாயர், “தேசிய தினப் பேரணி உரை மக்களுக்கு பல்வேறு உதவிகள் காத்திருக்கின்றன என்பதை வலியுறுத்தியுள்ளது. மக்கள் தங்களை மட்டும் பார்க்காமல் ஒன்றுபட்ட சமூகமாக நாம் எவ்வாறு முன்னேறலாம் என்று பார்த்தால் சிறப்பு,” என்றார்.

“பலதரப்பட்ட தலைப்புகள் இந்தக் கலந்துரையாடலில் பேசப்பட்டன. என்னைப் போன்ற ஓய்வுபெற்றவர்களுக்கு ஆதரவு உள்ளது. இளையர்களைக் கருத்தில்கொண்டு பகிரப்பட்ட தகவல்கள் உதவியாக இருந்தன,” என்று பங்கேற்பாளர் மார்கரிட்டா சுப்ரமணியம், 71, தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்