சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு வலுப்பெற அதிக அளவு பங்காற்றியதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கிற்கு நாட்டின் மதிப்புக்குரிய உயரிய பட்டம் (Grand Cordon of the Order of the Rising Sun) வழங்கவுள்ளது ஜப்பான் அரசாங்கம்.
இதுகுறித்த அறிவிப்பைச் சிங்கப்பூரில் உள்ள ஜப்பானியத் தூதரகம் அதன் சமூக ஊடகப் பக்கத்தில் ஏப்ரல் 29ஆம் தேதி வெளியிட்டது.
2004 முதல் 2024ஆம் ஆண்டுவரை சிங்கப்பூரின் பிரதமராக இருந்த திரு லீ இரு நாடுகளுக்கு இடையிலான நட்புக்கு முக்கிய பாலமாக இருந்ததாக அது குறிப்பிட்டது.
மூத்த அமைச்சர் லீயை கௌரவித்த ஜப்பான் அரசாங்கத்திற்குச் சிங்கப்பூர் நன்றி தெரிவித்ததாகச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையே அரசியல், பொருளியல் எனப் பலதரப்பு விவகாரங்களில் நீண்டகாலப் புரிந்துணர்வு உள்ளதாகவும் அப்பேச்சாளர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு இருநாடுகளுக்கும் இடையிலான அரசதந்திர உறவு 60வது ஆண்டை எட்டவுள்ளது.
இதற்கு முன்னர் இந்தப் பட்டம் முன்னாள் பிரதமர்களான லீ குவான் யூ, கோ சோக் டோங் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் துணைப் பிரதமர் ஜெயகுமாருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது.

