மரின் பரேட் குழுத்தொகுதியில் அங்கமாக இருந்த தெலுக் குராவ், ஓப்ரா எஸ்டேட் நிலப் பகுதிகள் உட்பட ஜூ சியாட் தொகுதி ஆகியவை ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம், அக்குழுத்தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கை 25 விழுக்காடு அதிகரித்துள்ளதாக செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) வெளியான தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு அறிக்கை தெரிவிக்கிறது.
மரின் பரேட் குழுத்தொகுதியின் ஒருபகுதியாக ஜூ சியாட் இருந்தபோது அவ்வட்டாரம் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங்க்கின் மேற்பார்வையில் இருந்தது.
தற்போது ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்குத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தலைமை தாங்குகிறார். 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவருடன் இணைந்து நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி வாகை சூடினர். தகவல், மின்னிலக்க மேம்பாட்டு, தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியாட் ஹாவ், பிரதமர் அலுவலக அமைச்சர் டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான், திருவாட்டி ஜெசிகா டான், திருவாட்டி ஷெரில் டான் ஆகியோர் ஆவர்.
மார்ச் 11ஆம் தேதி வெளியான தேர்தல் எல்லைகள் குறித்த அறிக்கையில், அங் மோ கியோ, வெஸ்ட் கோஸ்ட்- ஜூரோங் வெஸ்ட், நீ சூன், ஈஸ்ட் கோஸ்ட் ஆகியவை இவ்வாண்டு தேர்தல் களம் காணும் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய குழுத்தொகுதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
40,675 வாக்காளர்களைக் கொண்ட ஜூ சியாட் தொகுதியை, ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியுடன் இணைப்பதன் மூலம் தற்போது அக்குழுத் தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கை 150,691ஆக அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை 120,239 ஆக இருந்தது.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் அங்கம் வகித்த சிக்லாப் வட்டாரத்தின் குறிப்பிட்ட சில பகுதிகள் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு உறுப்பினர்களைக் கொண்ட பாசிர் ரிஸ்- சாங்கி குழுத் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.