197 கிச்சனர் சாலையிலிருந்து 2 வீராசாமி சாலைக்கு இடம் மாற்றம் காண்கிறது கலாம் உணவகம்.
சென்ற ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி தொடங்கப்பட்டு, ஓர் ஆண்டுக்கும் மேலாக கிச்சனர் சாலையில் ஒரு பிரபல உணவகமாக திகழ்ந்து வருகிறது.
அங்கிருந்து ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலுக்கு அருகே இடம் மாற்றம் காணும் புதிய உணவக வளாகத்தின் திறப்பு விழா டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும்.
லிட்டில் இந்தியா பெருவிரைவு ரயில் நிலையத்திலிருந்து ஏறத்தாழ 5 நிமிடங்களில் புதிய வளாகத்தை நடந்து சென்றடைய இயலும்.
டிசம்பர் 21ஆம் தேதி நடக்கவிருக்கும் திறப்பு விழாவில் வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்புச் சலுகைகள் காத்திருக்கின்றன. கட்டணம் செலுத்த வருவதற்கு முன்பு, ஏதேனும் ஒரு சிறப்பு சலுகையை பெறுவதற்கான வாய்ப்பு உண்டு.
புதிய வளாகத்தின் சிறப்புகள்
திறக்கப்படவிருக்கும் புதிய உணவகத்தில் 100 வருகையாளர்களை உள்ளடக்கும் விழா மண்டபமும் அடங்கும். பிறந்தநாள் விழாக்கள், சமூக கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வாடிக்கையாளர்கள் இந்த மண்டபத்தை உபயோகிக்கலாம்.
அதோடு, புதுப்பிக்கப்பட்ட இடம், இசையோடு கூடிய ஒரு ரம்மியமான சூழல், உணவகத்தின் பின்புறத்தில் சிறிய தோட்டம் ஆகியவற்றையும் வாடிக்கையாளர்கள் அனுபவிக்கலாம்.
இந்த இடமாற்றத்திற்கான இரண்டு முக்கிய காரணங்களை உணவகத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஜான் ராமமூர்த்தி பகிர்ந்து கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“முதலில், திட்டமிடப்பட்ட புதுப்பிப்பு பணிகளின் காரணமாக கிச்சனர் சாலை வளாகத்திலிருந்து வெளிவர வேண்டியிருந்தது.
ஆனால் மிக முக்கியமாக, லிட்டில் இந்தியாவின் மையப் பகுதியில், இந்திய சமூகத்தினரையும் அனைத்துலக வாடிக்கையாளர்களையும் வெகுவாக ஈர்த்து, எங்கள் உணவகத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்த இடம் மாற்றத்தை காண்கிறோம்.” என்றார் அவர்.
புதுப்பிக்கப்பட்ட உணவு பட்டியல்
காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை கலாம் உணவகம் திறந்திருக்கும்.
இந்திய உணவின் பன்முகத் தன்மையை பிரதிபலிக்கும் விதமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பஞ்சாப், குஜராத் போன்ற வெவ்வேறு மாநிலங்களின் உணவு வகைகளையும் கலாம் உணவகம் வழங்குகிறது.
கலாம் உணவகத்தின் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் மீன் தலை குழம்பு, மட்டன் சுக்கா, குச்சி கோழி, நல்லி வறுவல் போன்ற உணவு வகைகள் பிரபலம்.
முருங்கை சாறு போன்ற பாரம்பரியமான ஆரோக்கியமான உணவு வகைகளையும் கலாம் உணவகத்தில் சுவைத்து மகிழலாம்.
உணவு விநியோகம் வழங்கும் கலாம் உணவகம், கல்யாணம், விருந்து நிகழ்ச்சி போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் சேவை வழங்கி வருகிறது.
‘கலாமின் சுவடுகள்’ சிறப்பு நிகழ்ச்சி
“அப்துல் கலாம் அவர்களின் கொள்கைகளும் கருத்துகளும் சிங்கப்பூர் மக்கள் மனத்திலும் பதிய வேண்டும் என்பதே எங்களது விருப்பம்” என கலாம் உணவகத்தின் பெயருக்குப் பின் இருக்கும் நோக்கத்தை விவரித்தார் ஜான் ராமமூர்த்தி.
மத நல்லிணக்கத்தை முன்னிறுத்திய தலைவராக என்றென்றும் அப்துல் கலாம் அவர்களை மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை முன்னிறுத்தி அவரது பெயரில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கும் கலாம் உணவகம் ஆதரவு வழங்கி வருகிறது.
உதாரணத்திற்கு, கலாமின் பிறந்தநாள், நினைவு நாள் போன்றவற்றை ஒட்டி நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு உணவு ஆதரவாளராக கலாம் உணவகம் பங்களித்துள்ளது.
அதே போல, திறப்பு விழாவை முன்னிட்டு, அப்துல் கலாம் இலட்சியக் கழகத்தோடு இணைந்து ‘கலாமின் சுவடுகள்’ என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது கலாம் உணவகம்.
இந்நிகழ்ச்சி புதிய வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும். சமூக தலைவர்கள் உட்பட வெவ்வேறு மதங்களை சேர்ந்த பிரதிநிதிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வர்.
சிறப்பு விருந்தினராக அப்துல் கலாமின் குடும்ப உறுப்பினர், ஷேக் சலீம் கலந்துகொள்வார். இந்நிகழ்ச்சிக்குக் கட்டணம் இலவசம்.

