ஆர்ச்சர்ட் ரோடு வட்டாரத்தில் அமைந்துள்ள கரவோக்கே இசைக்கூடத்தின் உரிமையாளர் மீதும் அவரது கணவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
அந்தச் சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) அதிகாலை 3 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை கூறியது.
தாங்கள் தாக்கப்பட்டது குறித்து கப்பேஜ் பிளாசாவில் உள்ள இசைக்கூடத்தின் உரிமையாளரான திருவாட்டி இங் சியூ சிங், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் புதன்கிழமை (மார்ச் 26) விளக்கினார்.
இரவு நேரம் வர்த்தகம் முடிந்ததும் ஊழியர்களிடம் இருந்து விடைபெற்ற தாங்கள் இருவரும் கப்பேஜ் பிளாசா நான்காவது தளத்தில் உள்ள மின்தூக்கிக்குள் நழைந்தபோது கும்பல் ஒன்று மின்தூக்கியில் இருந்து வெளியேறியது.
இரு ஆடவர்களும் இரு பெண்களும் அடங்கிய அந்தக் கும்பல் போதையில் இருந்தது என்றார் திருவாட்டி இங்.
ஆடவர்களில் ஒருவர் தமது கணவரைத் தள்ளிவிட்டதாகவும் அதனைத் தடுக்க முயன்ற தம்மை அந்த ஆடவர் கையால் குத்தியதாகவும் அவர் கூறினார். கும்பலைச் சேர்ந்த இருவர் கப்பேஜ் பிளாசா கடை ஒன்றில் ஊழியர்கள் என்று தம்மால் உணரமுடிந்ததாகவும் அவர் கூறினார்.
“ஆடவரில் ஒருவர் எனது தலைமுடியைப் பிடித்து இழுத்ததுடன் தம்மை அடித்து தாக்கினார். என்னை தரதரவென்று இழுத்துச் சென்ற அவர் எனது முகத்தை தரையில் மோதினார். மற்றோர் ஆடவர் எனது கணவரைத் தாக்கினார்,” என்றார் அந்தப் பெண்.
அதனால் தமது முகத்திலும் காலிலும் காயங்கள் ஏற்பட்டதோடு தலைமுடி கொத்தாகப் பறிக்கப்பட்டதாகவும் திருவாட்டி இங் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அந்தச் சம்பவத்திற்குப் பின்னர் 33 வயது ஆடவரும் 28 வயதுப் பெண்ணும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும், 41 வயது சீன நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் காவல்துறைக்கு அவர் உதவி வரும் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை கூறியது.