நிலச் சோதனைச்சாவடிகள் வழியாக சிங்கப்பூருக்குள் நுழையும் பேருந்துகள், தங்கள் பயணிகளின் தகவல்களை முன்கூட்டியே குடிநுழைவு,சோதனைச்சாவடிகள் ஆணையத்திடம் (ஐசிஏ) சமர்ப்பிக்குமாறு கேட்கப்படலாம்.
உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் நுழைவதற்குமுன் பேருந்துச் சேவை வழங்குநர்கள் பயணிகளின் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம். அதை முன்கூட்டியே சமர்ப்பிப்பதன் மூலம் சிங்கப்பூரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துபவர்கள் தீவுக்குள் நுழைவதைத் தடுக்க முடியும்.
தற்போது விமானம், கப்பல், ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் விவரங்களை முன்கூட்டியே அந்தச் சேவை வழங்குநர்கள் சமர்ப்பித்து வருகின்றனர்.
பேருந்துச் சேவை வழங்குநர்கள் பயணிகளின் விவரங்களை முன்கூட்டியே சமர்ப்பிக்கும் இந்தத் திட்டமானது குடிநுழைவுச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்களின் ஒரு பகுதியாகும்.
குடிநுழைவு (திருத்தம்) மசோதாவை நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காக உள்துறை இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ புதன்கிழமை தாக்கல் செய்தார்.
அம்மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்தால், விரும்பத்தகாத பயணிகள் பயணம் செய்வதைத் தடுக்கும் வகையில் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் பேருந்துச் சேவை வழங்குநர்களுக்குப் பயணத் தடை வழிகாட்டி நெறிமுறைகளை வழங்க முடியும்.
தீவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துபவர்களும் இந்த விரும்பத்தகாத பயணிகளில் அடங்குவர் என உள்துறை அமைச்சு புதன்கிழமை தெரிவித்தது.
இது அவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைவதைத் தடுக்கும். ஐசிஏவின் உத்தரவை மீறும் பேருந்துச் சேவை வழங்குநருக்கு $10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
பயணத் தடை உத்தரவை மீறுபவர்களுக்கு அதிகபட்ச அபராதத்துடன் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டில் ஏதாவது ஒன்று விதிக்கப்படும் என உள்துறை அமைச்சு தெரிவித்தது.
பயணிகள், பணியாளர்கள் பற்றிய தகவல்களை முன்கூட்டியே சமர்ப்பிக்கத் தவறும் பேருந்து வழங்குநர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.
பெருந்தொற்றுக் காலங்களில் முன்மொழியப்பட்ட இந்த மசோதா ஐசிஏவின் திறனை மேம்படுத்தி, திறம்படச் செயல்பட உதவும்.