சாங்கி விமான நிலையத்தில் பயணத்துக்கு முன் நடக்கும் சோதனையில் 32 வயது இந்தோனீசிய ஆடவர் அவரது வலது காலணியில் ஒரு கத்தியை மறைத்துவைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த ஆடவர்மீது சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
விமான நிலைய முனையம் 4ல் புறப்பாடுகளுக்கான வளாகத்தில் நடக்கும் கடுமையான சோதனைகளின்போது பாதுகாப்பு வளையத்தைக் கடக்கும்போது அவரது காலுறையில் அந்த 19.5 சென்டிமீட்டர் நீளக் கத்தியை மறைத்து வைத்திருந்தார் என்று காவல்துறை சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) அதன் அறிக்கையில் வெளியிட்டது.
அக்கத்தியின் வெட்டக்கூடிய பாகம் 12 சென்டிமீட்டர் அளவு இருந்துள்ளது. அது முதலில் ‘எக்ஸ்ரே’ எனப்படும் ஊடுகதிர் சோதனைக் கருவியால் உணரப்பட்டு, பிறகு அந்த ஆடவர் தனியறைக்கு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டுச் சோதிக்கப்பட்டார்.
அங்கு அவரது வலது காலணியின் காலுறைக்குள் கத்தி இருந்தது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆயுதத்தை அவர் நெகிழிப் பைகளால் சுருட்டி அதனை வெளியில் எடுக்கமுடியாதபடி இறுக்கிவைத்து மறைத்திருந்தார்.
பொது இடத்தில் பயங்கரமான ஆயுதத்தை வைத்திருந்த குற்றம் அவர்மீது சுமத்தப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் சிறையுடன் ஆறு பிரம்படிகள் அவருக்குத் தண்டனையாக விதிக்கப்படலாம்.


