ஹோலண்ட் சாலையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) மாலை லம்போர்கினி கார் ஒன்றில் தீப்பற்றியது. தீயை சாதுரியமாக அணைக்க உதவிய பேருந்து ஓட்டுநர் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
எஸ்பிஎஸ் டிரான்சிட் சேவை எண் 123 பேருந்தை ஓட்டிய 51 வயது ஓட்டுநர் சாங் சிபெங், சாலையில் கார் ஒன்று புகையை வெளிப்படுத்துவதைக் கண்டார். உடனடியாகத் தமது பேருந்தைப் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, பயணிகளிடம் விவரத்தைக் கூறிவிட்டு, பேருந்தில் இருந்த தீயணைப்புச் சாதனத்தை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட காரை நோக்கி விரைந்தார்.
காரின் உரிமையாளரிடம் இருந்த தீயணைப்புச் சாதனத்தில் இருந்த தீயணைப்புத் திரவம் தீர்ந்துபோயிருந்த வேளையில், ஓட்டுநர் சாங் பேருந்தின் தீயணைப்புச் சாதனத்தைப் பயன்படுத்தி காரின் உட்பகுதியில் பரவிய தீயை அணைத்தார்.
எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து ஓட்டுநர்களுக்கு அடிப்படைத் தீயணைப்புப் பயிற்சிகள் வழங்கப்படுவதால், சாங் எவ்வித பதற்றமும் இன்றி அமைதியாகவும் தீர்க்கமாகவும் செயல்பட்டு உதவியதாக நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கிரேஸ் வூ தெரிவித்தார்.
சரியான நேரத்தில் துரிதமாகச் செயல்பட்டு சக வாகன ஓட்டுநருக்கு உதவிய பேருந்து ஓட்டுநருக்கு இணையவாசிகளும் தங்களது பாராட்டைத் தெரிவித்து வருகின்றனர்.


