திங்கட்கிழமையன்று (ஜூலை 13), ஜூராங்கில் திறக்கப்பட்ட, வர்த்தக மின்சார வாகனங்களுக்கான சிங்கப்பூரின் ஆகப்பெரிய பொது அதிவேக மின்னேற்ற நிலையத்தை, மின்சாரப் பேருந்துகள், சரக்கு லாரிகளின் ஓட்டுநர்கள் இப்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.
2E ஜாலான் பாப்பான் என்ற முகவரியில் உள்ள ஜேஐசி வாகனப் பரிசோதனை மையத்திற்குள் அமைந்துள்ள இந்த நிலையத்தில், முதல் தளத்தில் ஆறு, ஐந்தாம் தளத்தில் 40 என மொத்தம் 46 மின்னேற்றும் கூடங்கள் உள்ளன. இந்த வசதி மின்சாரக் கார்கள், டாக்சிகளின் ஓட்டுநர்களுக்கும் திறக்கப்பட்டுள்ளது.
கெப்பலின் மின்சார வாகன மின்னேற்றப் பிரிவான வோல்ட் சிங்கப்பூரால் இயக்கப்படும் இந்த மின்னேற்றக் கூடங்கள், வாகனத்தின் திறனைப் பொறுத்து, 10 நிமிடங்களில் 300 கி.மீ. தூரம் வரை பயணம் செய்வதற்கான ஆற்றலை வாகனத்திற்கு வழங்கக் கூடியவை.
சராசரி மின்சாரக் கார்களைவிட அதிக மின்கலன் திறன் கொண்ட மின்சாரப் பேருந்துகளில் 20 விழுக்காட்டிலிருந்து 80 விழுக்காடு வரை மின்னேற்றம் செய்ய இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகிறது.
பெரும்பாலான வணிக மின்னேற்றக் கூடங்களைப் பயன்படுத்துவதற்கு நான்கு முதல் ஆறு மணி நேரம் ஆகும். ஒரு மின்கலத்தை 20 விழுக்காட்டிலிருந்து 80 விழுக்காடு வரை மின்னேற்றம் செய்ய ஆகும் நேரம், பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு அளவுகோலாகும். ஏனெனில், அந்த வரம்பிற்குள் மின்னேற்றம் செய்வது பொதுவாக மிக வேகமாக இருக்கும்.
தொடக்க விழாவில் கலந்துகொண்ட போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சுன் ஷுவேலிங், தமது ஃபேஸ்புக் பதிவில், “இந்த மையம் சிங்கப்பூரின் கனரக வாகனங்களை மின்மயமாக்குவதற்கு ஆதரவளிப்பதாகவும் அதன் மூலம் அத்தகைய வாகனங்களுக்கான மின்னேற்றும் நிலையங்களின் எண்ணிக்கையை 30 விழுக்காடு அதிகரிப்பதாகவும் தெரிவித்தார்.
ஜேஐசி வாகனப் பரிசோதனை மையத்தில் தங்களின் கட்டாயப் பரிசோதனைகளுக்குச் செல்லும் மின்சார வாகனங்களும் இந்த மின்னேற்றக் கூடங்களைப் பயன்படுத்தலாம்.
வோல்ட்டைத் தனது மின்னேற்றும் பங்காளியாக நியமித்துள்ள கம்ஃபர்ட்டெல்குரோ பேருந்து நிறுவனத்தால் இயக்கப்படும் தனியார் மின்சாரப் பேருந்துகளே, இந்த மையத்தின் முக்கியப் பயனர்கள்.
மின்சார வாகனக் குழுக்களை இயக்கும் நிறுவனங்களுடன், இந்த மையத்தைப் பயன்படுத்துவது குறித்து ‘வோல்ட்’ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

