திரவ இயற்கை எரிவாயுவில் இயங்கும் மிகப் பெரிய கப்பல் சிங்கப்பூர் வந்தடைந்தது

திரவ இயற்கை எரிவாயுவில் இயங்கும் மிகப் பெரிய கப்பல் சிங்கப்பூர் வந்தடைந்தது

2 mins read
f1bfd7c4-71a1-4fa7-9dc6-b3eb73b92713
ஜூன் 1ஆம் தேதியன்று பாசிர் பாஞ்சாங் கடற்பகுதியில் நங்கூரமிட்ட ‘சிஎம்ஏ சிஜிஎம் நோட்ரே டேம்’ கப்பல். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) மூலம் இயங்கும், உலகின் மிகப் பெரிய கொள்கலன் கப்பல் என்று கூறப்படும் ‘சிஎம்ஏ சிஜிஎம் நோட்ரே டேம்’ தனது முதல் வணிகப் பயணத்தின் ஒரு பகுதியாக திங்கட்கிழமையன்று (ஜூன் 1) சிங்கப்பூர் வந்தடைந்தது.

பிரான்ஸ் நாட்டுக்கொடியுடன் பயணம் செய்யும் 400 மீட்டர் நீளமுடைய இக்கப்பல், ஐஃபிள் கோபுரத்தை விடவும் நீளமானது. ‘சிஎம்ஏ சிஜிஎம்’ நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் தலைமை வர்த்தக அதிகாரி கிரெகரி ஃபூர்சின், சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையப் பிரதிநிதிகள் முன்னிலையில் பாசிர் பாஞ்சாங் கடற்பகுதியில் நங்கூரமிடப்பட்டுள்ள ‘சிஎம்ஏ சிஜிஎம்’ கப்பலில் இதனைத் தெரிவித்தார்.

24,000 கொள்கலன்களைச் சுமந்து செல்லும் ஆற்றல் கொண்ட இக்கப்பல், எல்என்ஜி மற்றும் வழக்கமான எரிபொருள் ஆகிய இரண்டிலும் இயங்கக்கூடியது. இது புவி வெப்பமாதலுக்குக் காரணமான கரியமில வாயு வெளியேற்றத்தை 20 விழுக்காடு வரை குறைக்கிறது.

மேலும், இதன் பயணப் பாதைகளைத் திட்டமிட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் 360 டிகிரி கண்காணிப்பிற்காக கருவிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. ஆசியாவையும் ஐரோப்பியப் பொருளியலையும் இணைக்கும் உலகின் முக்கிய வர்த்தகப் பாதையில் இக்கப்பல் பயணம் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறை சிங்கப்பூரில் நிறுத்தப்படும்போதும் இக்கப்பலிலிருந்து ஏறத்தாழ 2,000 முதல் 4,000 கொள்கலன்கள் இறக்கப்படுகின்றன. இக்கப்பலில் ஒரே நேரத்தில் ஏறத்தாழ 30 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஷங்காயிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய இக்கப்பல், சுவேஸ் கால்வாய் நோக்கிச் செல்வதற்காக ஜூன் 1ஆம் தேதி மாலை 6 மணிக்குச் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்