3 பில்லியன் வெள்ளி சட்டவிரோத பண பரிவர்த்தனை சம்பவத்தில் கைதான சூ ஜியன்ஃபெங் தம்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்.
வனுவாட்டு நாட்டை சேர்ந்த 36 வயது சூ, தன்னிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 178.9 மில்லியன் சொத்துகளை சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பண பரிவர்த்தனை சம்பவம் தொடர்பாக 10 வெளிநாட்டவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டனர்.
சூவையும் சேர்த்து இதுவரை 9 பேர் தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.
சூவிடமும் அவரது மனைவியிடமும் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளில் 95.5 விழுக்காடு சொத்துகள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
விசாரணையின் போது சூ, 2013ஆம் ஆண்டு முதல் பிலிப்பீன்சில் சட்டவிரோதமாக இணையம் வழி சூதாட்ட தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. சூதாட்ட தொழில் மூலம் பெரிய அளவில் சூ லாபத்தை ஈட்டினார்.
சூ 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் வந்தார். அவரின் பிள்ளைகள் சிங்கப்பூரில் படிக்க அவர் விரும்பியதால் சூ சிங்கப்பூரை தேர்ந்தெடுத்ததாக விசாரணையில் தெரியவந்தது.
சூவுக்கு 18 மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசாங்கத் தரப்பு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது. ஆடவருக்கான தண்டனை ஜூன் 10ஆம் தேதி விதிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

