சிங்கப்பூர், வியட்னாம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான இருதரப்பு உறவைக் குறிக்கும் வகையில், பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் வியட்னாமிய அதிபர் டோ லாம் ஆகியோர் சிங்கப்பூர் பூமலையில் ‘ஹோபியா ரெகோபி’ வகை மரக்கன்றை நட்டுள்ளனர்.
இந்த வலுவான மரமானது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நெருக்கமான உறவின் பொருத்தமான சின்னம் என்று பிரதமர் வோங் சனிக்கிழமையன்று (மே 30) ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
“இந்த மரத்தைப் போலவே, சிங்கப்பூர்-வியட்னாம் நட்புணர்வும் ஆழமாக வேரூன்றியுள்ளது. இது காலப்போக்கில் மேலும் செழித்து, வலுவடைந்து வளரும்,” என்று பிரதமர் வோங் தெரிவித்தார்.
வியட்னாமின் அதிபரான பிறகு ஆசியான் நாடுகளுக்கான தனது முதல் அதிகாரபூர்வப் பயணத்தின் ஒரு பகுதியாக, அதிபர் தோ லாம் வியாழக்கிழமையன்று (மே 28) நான்கு நாள் பயணமாகச் சிங்கப்பூர் வந்தடைந்தார்.
முன்னதாக வெள்ளிக்கிழமையன்று (மே 29) நடைபெற்ற ஷங்கிரிலா கலந்துரையாடல் மாநாட்டில் முதன்மையுரையாற்றிய அதிபர் தோ லாம், விதிமுறைகளுக்கு உட்பட்ட ஒழுங்குமுறையைப் பேணுதல், சுயகட்டுப்பாடு மற்றும் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை வளர்த்தல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று (மே 30) அவருக்குப் பிரதமர் வோங் மதிய விருந்தளித்தார்.

